Quantcast
Channel: செய்திகள்-கருத்துக்கள் –ஓரினம்
Viewing all 49 articles
Browse latest View live

What will People Say: –படைப்பாக்கங்களுக்கான அழைப்பு: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சிற்றிதழ்

$
0
0

What will People Say: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு, பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம்

What Will People Say கூட்டியக்கம் படைப்பாக்கங்களை சமர்ப்பிக்க உங்களை வரவேற்கிறது. இந்த கூட்டியக்கம் நம் கதைகளை பகிர்வதற்கான, ஆதரவான சமூகங்களை கட்டமைப்பதற்கான, மற்றும் அடக்குமுறைக்கு எதிரான பண்பாட்டு எதிர்ப்பலைகளை ஒழுங்கமைப்பதற்கான தளங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கூட்டியக்கம் இருமொழி (ஆங்கிலம்/தமிழ்) சிற்றிதழ் மற்றும் வலைப்பதிவினூடே மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் தொடர்பான கதைகள், அனுபவங்கள், மற்றும் கனவுகளை பகிர்வதற்கான பாதுகாப்பான அனாமதேய வெளிகளை உருவாக்க முனைகின்றது. ஈழத்தமிழ் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களென தங்களை அடையாளப்படுத்தும் அல்லது ஈழம், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தற்போது கனடாவில் வாழ்கின்ற படைப்பாளிகளிடமிருந்து  இந்த சிற்றிதழ் மற்றும் வலைப்பதிவுக்கான படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம். உங்களது கதைகள், வரைகதைகள், கவிதைகள், ஓவியங்கள் அல்லது ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு ஆனி மாதம் இவை வெளியிடப்படும்.
சில முன்மொழியப்பட்ட தலைப்புகள் (ஆனால் இதற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை):
  • குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/மறுக்கப்பட்ட பாலியல்பு, பால்நிலை அடையாளம் மற்றும் வெளிப்படுத்துகை
  • பரந்த மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர் சமூகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்
  • நம் சமூகங்களுக்கு உள்ளேயும், வெளியேயுமான தனிமைப்படுத்துதல், இனவாதம்
  • தமிழ் சமூகங்களில் தோழமை
  • உடன்போக்கு, பாலுறவு, காதல் மற்றும் உறவுகள்
  • முரண்பாடு அத்துடன்/அல்லது புலம்பெயர்வு அல்லது புகலிட வாழ்வுடன் தொடர்புடைய மனவடு மற்றும் கூட்டு ஆற்றுப்படுத்துகை

எப்படி சமர்ப்பிப்பது:

அனைத்து வகையான படைப்புக்களும் தலைப்பு, படைப்பின் பின்புலம் (100 வார்த்தைக்களுக்குட்பட்டதாக) மற்றும் படைப்பாளியின் பெயர்/புனைபெயர் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் மூலம்whatwillpeoplesay@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சல் தலைப்பில் What Will People Say சிற்றிதழுக்கான படைப்பு என்பதை குறிப்பிடவும்.*அனாமதேயமாக பங்குபற்ற விரும்புபவர்கள் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தகவல்களை (உ+ம்: படைப்பில் இடம்பெறும் பெயர்கள்) நீக்கிவிடுங்கள்.

அனைத்து படைப்புக்களும் வைகாசி மாதம் 1ம் திகதி இரவு 11:59க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.

எழுத்துமூலப் படைப்புக்கள்:

எழுத்துமூலப் படைப்புக்கள் 250 வார்த்தைகளுக்குட்பட்டதாக, ஏரியல் எழுத்துருவில் 12 அளவில், மைக்ரோசொப்ட் கோப்பாக இருத்தல் வேண்டும்.

ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள்:

ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் மூன்று நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். இணைப்பு அல்லது கோப்பினை mp3 அல்லது wav (ஒலி ஊடகம்), 1920 x 1080க்குட்பட்ட mp4 அல்லது mov (ஒளி ஊடகம்) கோப்புகளாக அனுப்புங்கள்.

காட்சி ஊடகப் படைப்புகள்:

1920×1080க்கு உட்பட்ட jpg கோப்பாக இருக்க வேண்டும்.

இவற்றில் ஏதும் குழப்பங்கள், கேள்விகள் இருப்பின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.

மேலதிகத் தகவல்களுக்கு What will People Say கூட்டியக்கத்தை தொடர்புகொள்ளவும்:

Whatwillpeoplesay15@gmail.com
whatwillpeoplesaycollective.wordpress.com/

What will People Say ஒரு பன்முகத்தன்மை கொண்ட தமிழ் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம். இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் நேரிலும், இணையத்தினூடும் சந்திக்கின்றனர். நமது சமூகங்களின் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளமுள்ளோருக்கான வெளிகளை உரையாடல்களினூடாகவும், கற்கைநெறிகளூடாகவும், ஒன்றுகூடல்களுக்கூடாகவும், இளைஞர்களையும், வயது முதிர்ந்தவர்களையும் இணைத்தவாறு உருவாக்குவது இந்தக் கூட்டியக்கத்தின் நோக்கமாகும்.

The post What will People Say: – படைப்பாக்கங்களுக்கான அழைப்பு: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சிற்றிதழ் appeared first on ஓரினம்.


திருனர்* தினம் 2015 –வாழ்த்துக்கள்

$
0
0

உச்ச நீதி மன்ற பாலின சிறுபான்மையினருக்கான (திருநங்கை, திருநம்பி, கோத்தி, இஜரா, ஜோகம்மா, சிவசக்தி, பாலினம் மாற்றிக்கொண்டோர், கின்னர் இன்னும் சில) ஆனை மற்றும் திருனர் தின வாழ்த்துக்கள்

15 ஏப்ரல் 2014 அன்று இந்தியாவில் இதுவரையிலும் வெளிபடையாக தெறியாத சில பாலின அரசியலை முன்னிறுத்தும் விதமாக உயர்நீதி மன்றம் முக்கிய ஆனை ஒன்றை பிறப்பித்தது. இந்தியாவில் Hijra என்று அழைக்கப்படும் திருநங்கைகள் மற்றும் FtoM என்று அழைக்கப்படும் திருநம்பிகள் இவர்களுக்கு ஆண்/பெண் தவிற்த்து மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து பிற பிற்ப்படுத்தோருடன் சேர்த்து அரசியல் அமைப்பில் இருக்கின்ற அனைத்து அடிபடை உரிமைகளையும் கிடைக்க மத்திய மாநில அரசுகளும் விரைவில் நடவெடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆனை பிறபித்தது. வரும் 15 ஏப்ரல் 2015 அன்று ஒருவருடம் நிறைவு பெறும் நிலையில் நல்ல தீர்ப்புக்கு நன்றி சொல்ல நாம் விழா எடுத்து கொண்டாட உள்ளோம். இந்த விழா திருநங்கை திருநம்பி விழாவாக ஜென்டர் மைனாரிடிஸ்க்கு கொடுக்கபட்ட அங்கீகாரமாக அமைந்துள்ளது. நாம் இனி உச்சநீதி மன்றத்தின் ஆனைபடி என்ன நடந்துள்ளது இனி என்ன நடக்கவேண்டும் என்பதை இந்நாளில் நம் கோரிக்கையாக நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை முன்வைத்து எடுத்துச்செல்ல போராளிகளை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உச்சநீதி மன்ற ஆனையில் உள்ள 130 பக்கங்களில் எது சரி, எது சரி இல்லை என்பதையும் பார்கவேண்டும். இந்த விசையத்தில் நம் தமிழக அரசின் செயல்பாடுகள் என்ன என்று தெறிந்து கொள்ளவும் இனி வரும் வருடங்களில் அடிபடை உரிமைகளை பெற்று கல்வி வேலைவாய்ப்பு என எல்லா துறைகளிலும் நாம் உயர்ந்து நின்று சாதித்து காட்டவேண்டும். நாம் யாருக்கும் தலைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதே போல் உச்சநீதி மன்றம் மற்றொறு ஆனையான IPC 377 திருநங்கையருக்கும் எதிராக உள்ளது அதையும் திருத்தம் செய்ய பாடுபடவேண்டும். வரும் காலங்கள் நமக்கு வசந்தகாலங்களாக இருக்கவேண்டும் என்று வரும் திருனர் தினம்மும், பாலின சிறுபான்மையினர் தீர்ப்புதினமும் அமைய எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றியுடன் தெறிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்

ரேவதி

திருனர் – தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். உதாரணம் : தான் பெண் என்று மன அளவில் நம்பும் ஆண்கள். திருனர்கள் பால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வழிமுறைகளை செய்ய விரும்புவர்களாக இருக்கலாம் அல்லது விரும்பாதவர்களாக இருக்கலாம். திருனர்களின் பால் ஈர்ப்பும் எல்லோரையும் போல பன்மைபட்டது.

The post திருனர்* தினம் 2015 – வாழ்த்துக்கள் appeared first on ஓரினம்.

நன்றி ஹரீஷ்!

$
0
0

குடும்பப் பெயர் வைத்து எவரையும் அழைக்கும் பழக்கம் எனக்கில்லை. அது என்  விருப்பச் சார்பு*. இந்த கட்டுரை வெளி வருவதற்குள் உங்களுக்கு எண்ணற்ற வாழ்த்துக்களும், வசவுகளும் வந்திருக்கும்.

உங்கள் அம்மாவின் விளம்பரத்தை மையமாய் வைத்து நான் எழுதுவதால் தான் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து தொடங்குகிறேன்! மேலும் இது தொடர்பாய் பல வலைப்பதிவுகளும், விவாதங்களும் துளிர் விட்டுள்ளது ஆரோக்கியமானதென்றே நான் கருதுகிறேன்!

இந்த பழுத்துப்போன எழுத்து கதம்பத்தினை இன்னமும் படிக்க நினைக்கும் எல்லா வாசகர்களுக்கும் நன்றி! சுருக்கமாக நடந்தவற்றை விவரிக்கிறேன். ஹரீஷ் அவரின் அன்னை அவருக்காக வரன் தேடி நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தார். அதில் சாதி தடையில்லை,ஆயினும் ஐயர் சாதியினருக்கு சார்பு உண்டு என வரையப்பட்டிருந்தது. அதனைப் பதிவு செய்ய பல நாளிதழ்களும் மறுத்த நிலையில் மிட் டே (Mid-Day) எனும் நாளிதழ் பிரசுரித்தது. அதன் பின் பாராட்டியும் கண்டித்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

harish_matrimonial_ad

பாராட்டும் குரல்கள் 

இந்தியாவில்  முதல் முறையாக ஓர்பாலீர்ப்பு சார்ந்த வாழ்க்கைத்துணை தேடலுக்கு ஒரு குரல் கிடைத்துள்ளது.

எதிர்க்கும் குரல்கள் 

சாதி சார்பினை வெளிப்படையாய் தெரிவித்து இந்த விளம்பரம் சமூக சீர்திருத்தத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை என்னவென்றால், ஹரீஷ்-க்கு சார்பான குரல்கள் தான் அதிகம் (வெறும் 6 சதவிகித இந்தியத் திருமணங்களே சாதி கலப்புத் திருமணங்கள்). பாலீர்ப்பு சிறுபான்மையினர் அடிப்படை உரிமைக்காக தோள் நின்று போராடினாலும், அவர்கள் சாதி ஒழிப்பின் முக்கியத்துவத்தினை அறியவில்லை. சாதி, பாலீர்ப்பு அரசியலின் விளிம்பிலிருந்து ஒளியாண்டுகள் (light years) பல கடந்து இருப்பதாகவே பலரும் எண்ணுகின்றனர். எனக்கென்னவோ இவை அனைத்தும் சாதியெனும் கணத்தோடு வெட்டுண்ட (intersected) பகுதிகளாகவே தெரிகிறது.

இதனை மேலும் விவரிக்க, தருமபுரியில் நடந்த சம்பவத்தினை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இளவரசன், திவ்யா இருவரும் சாதி கலப்பு திருமணம் செய்து கொள்ள, அவர்களின் கிராமத்தில் கலவரம் தொடங்கிற்று. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொள்ளவே, குடிசை எரிப்பும், வன்முறையும் இடரின்றி தொடர்கின்றன! பின் திவ்யாவின் அன்னை தரப்பில் நீதி மன்றத்தில் மனு அளிக்கவே, ஆட்கொணர் நீதிப்பேராணை (writ of Habeus Corpus) வழங்கப்படுகிறது. திவ்யா பெற்றோருடன் செல்ல முடிவெடுக்க, இளவரசனின்  சடலம் அடுத்த நாள் மீட்கப்படுகிறது.

சாதியின் வன்மம்  மிக அதிகம்! சாதி எளிதில் மறையக்கூடிய விடயமில்லை. எல்லோருக்கும் இருக்கக்கூடிய சார்பு என்றாலும், இந்த விளம்பரத்தினை தருமபுரியோடு தரமேற்றி பார்க்காமல் என்னைப் போன்றோரல் இருக்க முடியாது!

“அதெல்லாம் சரி! சாதி எப்படிய்யா இதுக்குள்ள வந்துச்சு? என்னென்னவோ உளரிக் கொட்டுற!”, என்று நீங்கள் சொல்லலாம். பாலீர்ப்பு உரிமைகள் நிறுவப்பட்ட சமுதாயமாய் இந்தியா இருப்பதாய் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு இளவரசனும் திவ்யாவும், அமுதன் மற்றும் இளமாறனாய் இருப்பதாய் யோசித்துப் பாருங்கள்! நம் எல்லோருக்கும் அடிவயிற்றில் கொஞ்சம் நெருடல் ஏற்படுத்தும் காட்சிகள் தோன்றும்**!

சாதி சார்பு என்பது நகர தளங்களில் பழக்கம் மற்றும் வாழ்வியல் தொடர்பான சார்பாக சொல்லப்படுவதற்கு அடிப்படை இல்லாததாகவே கருதுகிறேன். குடும்ப பூசைகளிலோ, வழிபாட்டு முறைகளிலோ, விழாக்களிலோ பங்கு பெறுவதற்கான விதிகள் தன் சாதி மக்களுக்கு மட்டும் தான் இருக்கும் என்றும் மற்றவர்களுக்கு அவை விளங்காது எனவும் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? கற்றுக்கொள்வதற்கும், இசைந்து நடப்பதும் கடினமாக இருக்க இவை ஒன்றும் குவாண்டம் விசைவியல் (Quantum mechanics) அல்லவே?

நான் ஹரீஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த காரணம் இதுவே. அவரது விளம்பரம் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தினைத் தொடங்கியுள்ளது. சாதி எவ்வாறு பல தரப்பட்ட மக்களையும் பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு எண்ண வெளியினை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் வைணவ மத நம்பிக்கைச் சார்ந்த மாற்று பாலீர்ப்பு அமைப்பான கால்வா (GALVA***) போன்றவற்றின் தகவு பற்றி பலரும் விவாதித்தது நினைவிற்கு வருகிறது. முகப்புத்தகத்தில் நடக்கும் எந்த விவாதமும் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தாது என்றாலும் அவை ஒரு சிறு தீப்பொறியினை துவக்குகின்றன.

இது போன்ற வாய்ப்புகளைப் மாற்று-பாலீர்ப்பு சமூகத்தினர் பயன்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம் என்று நான் எண்ணுகிறேன். ஏனெனில் சட்ட ரீதியான தடைகளை நாம் எதிர்கொண்டு வெல்ல முடியும்! சாதி ரீதியான கட்டுப்பாடுகள் சட்டத்தைக்  காட்டிலும் வலுவானவை!

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ்  மக்களின் (individuals who do not subscribe to hetero-patriarchy / Queer) அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!

 “திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமோ என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையேதான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள். பெண்களே வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள், நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவர் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்படவேண்டும்.”

-பெரியார்


* சாதி ஆதிக்க மனித உருவில் இது நகநுனியாய் இருந்தாலும், அகற்றப்படவேண்டிய அழுக்காகவே அதனை நான் கருதுகிறேன்! குடும்ப/சாதி பெயர் பயன்படுத்தாவிட்டால் அவர்கள் சாதியற்றவர் ஆவதில்லை. ஆயின் அவரின் சாதி அடையாளத்தினை தெரு விளக்காய் பளீரிட விரும்பா/முடியா நிலைக்கு அது ஒருவரைத் தள்ளுகிறது!

** இவை நடக்கவில்லை என்று நினைக்காதீர்கள்!  பல நங்கைக் காதலர்கள் இந்தியா முழுவதிலும் தற்கொலை செய்து கொள்கின்றனர்! அதற்க்கு பாலீர்ப்பு  மட்டும் காரணமில்லை! சாதியும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

***அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு ஓர்பாலீர்ப்பு (இரு ஆண்கள்) திருமணத்தைப் பற்றிய கட்டுரையில் ஒருவரின் சாதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு காரணமாய் பிராமண சாதியின் செயல்பாடுகள் மற்ற சாதியினருக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளதாக அந்த அமைப்பின் மும்பை முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது! உயர் சாதிச் சலுகைப்  பற்றிய ஆழ்ந்த எண்ண  ஓட்டம் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

 

The post நன்றி ஹரீஷ்! appeared first on ஓரினம்.

சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை

$
0
0

ஓரினம் என்பது சென்னையை அடிப்படையாகக்கொண்டு தன்னார்வலர்களால் நடத்தப்படும் பதிவு செய்யப்படாத ஒரு கூட்டமைப்பு. இது ஆதரவு, கலாச்சாரம் மற்றும் போராட்டம் தொடர்பான தளங்களில் செயல்படுகிறது. சாதி, நிறம், இனம், மதம், பாலியல்-பாலினம், வயது மற்றும் திரன் என  எல்லாவிதமான ஒதுக்குதல்களையும் ஓரினம் எதிர்க்கிறது.

இதன் நீட்டிப்பாக, சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.

சமீபத்தில் ஓரினம்  முகநூல் பக்கத்தில் நடைபெற்ற சாதி, சாதி சார்ந்த ஒடுக்குமுறைகள், சாதியம் தொடர்பான உரையாடல்களுக்கு பிறகு நமது மதிப்பீடுகளை மீண்டும் தெளிவாக உறுதிபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்கிறோம். சாதி தொடர்பான பாரபட்சம் மற்றும் முன் அனுமானங்களை எதிர்கொள்ள ஓரினம் தனது நிலைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த விரும்புகிறது. சாதி அமைப்பு என்பது மக்களைத் தொடர்ந்து ஒடுக்குகின்ற, சுரண்டுகின்ற ஒரு திட்டமிடப்பட்ட அமைப்பாகவே  செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சாதி என்பது மக்களிடையே பிரிவினையை உண்டாக்கியுள்ள  ஒரு அமைப்பே தவிர, தனி மனித தேர்வு கிடையாது. சாதியம் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்பது மட்டுமல்லாது, ஒடுக்குமுறை, ஆணாதிக்கம், மதம், திறமை, வர்க்கபேதம் போன்றவற்றைக் கலைக்கவும் தடையாக இருக்கிறது.

நமது பாலியல்-பாலின உரிமைகள் இயக்கம் தமிழகத்தின் சுயமரியாதை இயக்கத்தின் கருத்தாக்கத்தை பின்பற்றி வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு தனிநபரின் கண்ணியத்திற்கு (மதிப்பிற்கு) உறுதியளிக்கிறது. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் “அனைத்து மனிதர்களும் சுதந்திரமான, சமமான மதிப்புகளும் உரிமைகளும் கொண்டவர்கள்” என்பதை வலியுறுத்துகிறது. சுய மரியாதை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஆகியவையின் கொள்கைகளுக்கு இணங்கி நடப்பதில் ஓரினம் உறுதியாக உள்ளது. நமது நோக்கத்திலான உலகம் என்பது அனைத்து பாலின மற்றும் பாலியலைச் சார்ந்தவர்களும் அவர்களது மனித உரிமைகளை எந்த ஒதுக்குதலும் இல்லாமல் அடைவதுதான். இந்த  பார்வையில் சாதியம் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரது கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் மீது செலுத்தப்படும் அறமில்லாத அநியாயமான அடக்குமுறை ஆகும். ஆகையால் சாதியம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை ஓரினம்  எதிர்க்கும் முறையில் செயல்பாடும். மேலும் சாதியினால் கிடைக்கும் தனிப்பட்ட சலுகைகள் விளைவான பாரபட்சத்தையும் முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்கொள்ள போராடும்.

The post சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை appeared first on ஓரினம்.

திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு  வழங்கக்கோரி தமிழ் நாடு மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்

$
0
0

திருநங்கைகளைப் பார்த்து “சுயமா ஒழைக்கறுதுக்கு உங்களுக்கு என்ன? பாலியல் தொழில் ஏன் செய்யறீங்க? கட கடையா ஏறி ஏன் காசு கேக்குறீங்க?” என்று கேட்பதற்க்கு நம் மக்களுக்கு மிகுந்த ஆர்வம்.

இந்த வினாக்களுக்கு விடை அளிக்கும் விதமாக பேசிய சென்னையை சேர்ந்த முதல் திருநங்கை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநரான வைஷ்ணவியின் உரையாடலை இந்த காணொளியில் பாருங்கள்.

சமுதாயத்தில் பலருக்கு எந்தவித தடங்கலும் இல்லாமல் கிடைக்கும் சராசரியான வேலை வாய்ப்புகள் எவ்வாறு திருநங்கையருக்கு மறுக்கப்படுகிறது என்பதைப் பற்றி அவர் தெளிவாக விவரிக்கிறார்.

திருநங்கையர் இன்றும் தொடர்ந்து கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு கண்ணியமான வேலை செய்யும் திருநங்கை பல போராட்டங்களைக் கடந்து அந்த நிலையை அடைந்துள்ளார். தன் தொழில் முனைப்பை ஆதரிக்கும் நிதி ஆதரவாளரை கண்டறிவது, தொழிலுக்கான இடத்தை வாடகைக்கு பெறுவது, அரசு ஆவணங்களை பெற்று தொழிலை தொடங்குவது வரை உள்ள ஒவ்வொரு படியும் பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது. இதைத் தாண்டி தொழிலை நிறுவிய பின், அந்த தொழிலில் உழைத்து தன் முதலீட்டை கூட மீட்டெடுக்க இயலாமல் இருக்கின்றார்.

இதற்கு ஒரே தீர்வு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு மட்டுமே! இதனை வலியுறுத்தி வரும் திங்கள் 17 ஆகஸ்ட் 2015 அன்று மாலை 2 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறும் தமிழகத்தைச் சார்ந்த திருநங்கைகள், திருநங்கைகள் அமைப்புகள், மாணவர்கள், திருநங்கை ஆதரவாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாங்கள் தங்களுடைய அமைப்புடன் கலந்து கொள்ளுமாறு மிக தோழமையோடு கேட்டுகொள்கிறோம்.

தொடர்ப்புக்கு: ஜெயா, சகோதரன் அமைப்பு: 9841865423

சங்கரி, நிறங்கள் அமைப்பு: 9790990622

The post திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு  வழங்கக்கோரி தமிழ் நாடு மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம் appeared first on ஓரினம்.

இதுவா சுதந்திரம்!?

$
0
0

இந்தியா சுதந்திரம் பெற்று 68 வருடம் முழுமையடைகிறதாம். எத்தனையோ ஆண்களும் பெண்களும் பிறந்து அரசின் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றி உழைத்து ஓய்வு பெற்றிருப்பார்கள். ஆனால், இதுகாறும் ஒரு திருநம்பிக்கோ, திருநங்கைக்கோ இந்த சுதந்திர நாட்டில் ஒரேயொரு அரசு வேலையேனும் கொடுக்கப்படவில்லை எனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?

இந்தியநாட்டில் பிறந்ததால் இந்தியப் பிரஜைகளானோம். ஆனால், எந்த இந்திய பிரஜைக்குரிய குறைந்தபட்ச உரிமைகளும் கிடைக்கப்பெறாத தாய்நாட்டின் அகதிகளாய்தான் வாழவேண்டுமெனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?

தமிழகத்தில் ஒரு சில திருநங்கைகள் விடாப்பிடியாக போராடியதன் பிறகு சில நல்லுல்லம் கொண்ட அதிகாரிகளால் பணி நிரந்தம் செய்யப்படாத சிறு சிறு பணிகள் கிடைத்துள்ளது. முறையான பணிநிரந்தரமற்ற, ஓரிரு பணியிடங்களை கொண்டே திருப்தியடைய வேண்டுமெனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?

தகுதியுடைய ஒரு இந்திய பிரஜை அரசு காவல்துறை பணிக்கு தேர்வெழுத வழக்கு பதிவு செய்துதான் எழுதவேண்டுமெனில், தேர்வில் தேர்வாகியும் உடற்தகுதி தேர்வுக்கு மறுக்கப்பட்டு பின் மீண்டும் வழக்கு பதிவுசெய்து, அதில் வென்றபின்பும் இறுதி நேரத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, பலவித மனஉலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, அதையும் தாண்டி, அனைத்து போட்டிகளிலும் வென்றபின்பும், வெளிப்படையாக மதிப்பெண்களை வெளியிடாமல் பலமணிநேர காத்திருப்பிற்கு பிறகு, ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி நேரம் அதிகமாகிவிட்டது எனக்கூறி வெளியேற்றப்படுவாரானால் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?

உலகம் முழுவதிலும் திருநங்கைகள் தெருவில் பிச்சை எடுப்பவர்களாக இருக்கும் ஒரே நாடு என்னும் பெருமை மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை மட்டுமே சாரும். மதத்தின் பெயரால், கடவுளர்களின் அவதாரம் என்ற அங்கீகாரத்துடன் ஆசிர்வாதம் வழங்குபவர்களாக மட்டுமே இந்த மதசார்பற்ற நாடு திருநங்கைகளை வைத்திருக்குமெனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?

கண்ணியமான வாழ்க்கைக்கு வழி மறுக்கப்பட்டு, சுயதொழில் செய்து வாழவும் போதுமான ஆதரவுவின்றி எது இருந்தாலும், இல்லையெனிலும் பசிக்கும் வயிற்றிற்க்காக தன் உடலை மூலதனமாகக் கொண்டு பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளுக்கு சட்டம்-ஒழுங்கு என்னும் போர்வையில் தண்டனைகளை தரும் பொறுப்பான இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?

இந்திய பிரஜைக்கான சமூக, பொருளாதார, கலச்சார உரிமையும், பாதுகாப்பும் முழுமுற்றாக மறுக்கப்பட்டு ஆனால் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடைவரை அனைத்திற்கும் வரியை மட்டும் இந்த இந்த தாய்நாட்டு அகதிகளான பிச்சைக்காரிகளிடமிருந்து தவறாமல் பிடிங்கிக்கொள்ளுமெனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?

இப்படிக்கு,

லிவிங் ஸ்மைல் வித்யா
தாய்நாட்டு அகதி,
சென்னை, தமிழ்நாடு,
இந்தியா

The post இதுவா சுதந்திரம்!? appeared first on ஓரினம்.

ஊடக வெளியீடு: திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்

$
0
0

வேண்டாம் கருணை!!! வேண்டும் உரிமை!!!

தமிழக வாழ் திருநங்கைகளாகிய நாங்கள் நல்வேரு தளங்களில் மனரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இச்சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம்.
இதற்கு இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகும் என கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வரும் 17.08.2015 திங்களன்று சுமார் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்த உள்ளோம்.
கோரிக்கைகள்:
  • மாற்றுப் பாலினத்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை வழங்கவேண்டும்.
  • மாற்றுப் பாலினத்தோருக்கான வாழ்வுரிமைக்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய NALSA தீர்ப்பினை விரைவில் சில திருத்தங்களுடன் அமல்படுத்த வேண்டும்.
  • தமிழக மகளிருக்கான மேம்பாட்டுத்திட்டங்களில் திருநங்கைகளையும் இணைத்திட வழிவகை செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.
இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக திரு நங்கைகள், திரு நங்கை சமூக அமைப்புகள், அமைப்பு சாரா திரு நங்கைகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆகவே எங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஊடாக (பத்திரிக்கை, தொலைகாட்சி, இணையம்) நண்பர்களும் கலந்து கொணடு எங்கள் போராட்டத்திற்கு வெற்றி சேர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!!!
மேலும் தொடர்புக்கு:
  • பானு: 8015088322
  • ஜெயா: 9841865423
  • சங்கரி: 9551837719

The post ஊடக வெளியீடு: திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம் appeared first on ஓரினம்.

உரிமைக்கான போராட்டம்

$
0
0

ஆகஸ்ட் 17-ம் தேதி அன்று மாலை 3 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே திருநங்கை/திருநம்பியருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் ஜென்னி மார்க்ஸ் குழுவினரின் பறையிசையுடன் தொடங்கியது. போராட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக சமூக ஆர்வலர், நாடகக் கலைஞர் ஸ்ரீஜித் சுந்தரம் துவக்கவுரையாற்றினார்.

போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், பொறியியல் கல்லூரி மாணவியுமான பானு பேசும்போது திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மறுக்கப்படுதல், பெற்றோரால் புறக்கணிக்கப்படுதல் என்பது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் அவசியத்தைப் பற்றியும் அந்த உரிமைகள் மறுக்கப்படுதலையும் பற்றிய தனது கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும் தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதில் மதுரையைச் சார்ந்த திருநங்கை சொப்னாவின் போராட்டத்தைப்பற்றி அவர் குறிப்பிட்டார்.பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்விகளில் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்குவதற்கு எதிராக இருந்த அரசாணைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர் சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து, தற்போது தான் பொறியியல் கல்லூரியில் படித்து வருவதைக் குறிப்பிட்டார். என்றாலும் தற்போதும் தன்னால் தனியார் பொறியியல் கல்லூரியில் தான் படிக்க முடிந்தது என்பதையும் அவர் பதிவுசெய்தார். திருநங்கை ப்ரத்யகா யாஷினியின் காவல்துறை தேர்வுகளில் நடந்த குளறுபடிகளைப் பற்றிய தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

IMG_0526
Photo Courtesy: Moulee

 

இறுதியாக அவர் நால்ஸா தீர்ப்பு வெளிவந்த பிறகு அதனை செயல்படுத்த தமிழக அரசு ஆறுமாதங்கள் கெடு கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் இன்னமும் செயல்படுத்தவில்லை என்பதையும் தெரிவித்த அவர் வரும் 26-ம் தேதி தொடங்க இருக்கும் சட்டமன்றக்கூட்டத்தொடரில் தமிழக அரசு ஏதேனும் நல்லமுடிவு எடுக்கும் என்றும், நால்ஸா தீர்ப்பு சில திருத்தங்களுடன் அமல்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தீக்கதிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குமரேசன் பேசும்போது சில வருடங்களுக்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தொடர்பாக ஒரு பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்த கேள்வி- பதில் பகுதியைச் சுட்டிக்காட்டினார். “பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?” என்ற கேள்விக்கு “பெண்கள் இடஒதுக்கீடு கேட்டு அதனை வழங்கிவிட்டால் பிறகு அலிகளும் இடஒதுக்கீடு கேட்பார்கள்” என்று ஏளனமாகப் பதில் சொல்லியிருந்ததை கடுமையாகச் சுட்டிக்காட்டிய அவர் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முழு உரிமைகளும் விரைவில் கிடைக்கும் எனவும் , இந்தப் போராட்டங்களுக்கு தனது ஆதரவு தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய பத்திரிக்கையாளர் TSS மணி திருநங்கைகளுக்கான நலவாரியம் இந்திய அளவில் அமைக்கப்படுவதின் அவசியம் பற்றிப் பேசினார்.

அடுத்து பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் T.P.ரங்கராஜன் திருநங்கைகளுக்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என்றும் மேலும் அகில இந்திய அளவில் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்படும் என்றும் திருநங்கைகளுக்கான வரலாற்று முக்கியத்துவம் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தன்னிடம் தெரிவித்ததாக கூறிய அவர் போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்து உரையாற்றிய அரங்கக் கலைஞர், போராளி லிவிங் ஸ்மைல் வித்யா இந்தியா சுதந்திரம் அடைந்து 68 வருடங்கள் ஆன பிறகும் கூட தலித் மக்கள், பழங்குடியினர் , திருநம்பிகள், திருநங்கைகள் என ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமூக உரிமை மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்றவை மறுக்கப்படுவது குறித்த தனது கண்டனத்தை பதிவுசெய்தார். மேலும் நம்பிக்கையின் பெயரால் திருநங்கைகள் பிச்சை எடுப்பதைத் தூண்டும் மதங்களுக்கு எதிராகவும், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளைத் தொடர்ந்து ஒதுக்கும் ஊடகங்களுக்க்கு எதிராகவும் தனது கருத்துக்களைப் பதிவுசெய்தார்.

மேலும் பேசிய வித்யா ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியக்குடிமகளிடம் வரி வசூலிப்பதைப்போலவே அனைத்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளிடம் வரி வசூலிக்கும் அரசாங்கம் மற்றவர்களுக்கு வழங்கும் உரிமைகளை ஏன் திருநர்களுக்கு வழங்குவதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

அடுத்து பேசிய தோழி அமைப்பைச் சார்ந்த திருநங்கை ஷிகா திருநங்கைகள் தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கு கூட முதல்வரையோ, அமைச்சர்களையோ அல்லது அரசு உயர் அதிகாரிகளையோ பார்க்க முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். அரசின் சார்பில் 230 வீடுகள் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டதாக ஊடகங்களுக்கு அரசு சார்பாக செய்தி அளிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் அந்த வீடுகள் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாத வரை “திருநங்கைகள் ஏன் பாலியல் தொழிலோ அல்லது பிச்சையெடுக்கவோ செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பும் அதிகாரமோ உரிமையோ யாருக்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த தீபா பேசும்போது இது இடஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பிற்கான போராட்டம் மட்டுமல்ல. சமத்துவம் மற்றும் நியாயத்துக்கான போராட்டம் என்றும் சரியான சமயத்தில், சரியான முறையில் இந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்தார்.

TUCS-ன் மாநிலத்தலைவர் பேராசிரியர் சரஸ்வதி பேசும்போது திருநங்கைகள் பங்குபெறுவதன் அவசியத்தைப் பற்றி பேசினார். மேலும் இடஒதுக்கீடு சலுகை இல்லை என்று தெரிவித்த அவர் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றக் கூற்றுப்படி விளிம்புநிலை மனிதர்களுக்கு வேலை , கல்வி தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஓரினம் அமைப்பு சார்பாக பேசிய மௌலி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற அடையாள அட்டைகளை மட்டுமே வழங்குவதன் மூலமாகப் பெருமை பட்டுக்கொள்ளும் அரசாங்கங்கள் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை அடிப்படை உரிமைகளுக்காகக் கூட இன்னும் போராடும் நிலையில் வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் படிக்கும் காலத்திலேயே கேலி, கிண்டல் மூலமாக திருநங்கைகளை பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டு, படித்தால் தான் வேலை தரமுடியும் என்று கூறி ஒதுக்குவது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டார்.

தங்களுடைய அலுவலகங்களில் திருநங்கைகள்/திருநம்பிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், பால்பாகுபாடற்ற கழிவறைகள் கூட அமைக்காமல் தங்களது நிறுவனத்தை மாற்றுப்பாலினத்தைச் சார்ந்தவர்கள் பணிபுரிய சிறந்த இடம் என்று கூறும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படும் தங்களது நிறுவனங்களின் கொள்கையைப் பற்றிய அறிக்கையை வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்தார்.இறுதியாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான உரிமைகள் மறுக்கப்படுவதை “சாதித் தீண்டாமை” என்று கூறுவதைப்போல விளிம்புநிலையில் வாழும் திருநங்கை/திருநம்பிகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை “பாலினத் தீண்டாமை” என்றே கருதவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அடுத்து பேசிய வரலாற்று மாணவர், அரசு தேர்வாணையத் தேர்வுகளுக்கான பயிற்சியாளர் சரண் திருநங்கைகளுக்கெதிரான ஒதுக்குதலை சட்டரீதியான ஒதுக்குதல், அரசியல் ரீதியான ஒதுக்குதல், பாலியல் ரீதியான ஒதுக்குதல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தப்போரட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கைகளில் சிலர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தராத மத்திய, மாநில அரசைக் கண்டித்து தங்களது பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை எரித்தும், கிழித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் திருநங்கைகள், திருநங்கைகளுக்கான அமைப்புகள், அமைப்பு சாரா தனிநபர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

வழக்கமாக பாலின/ பாலியல் சிறுபான்மையினர் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் பங்குபெறும் போராட்டங்களில் தவறாமல் இடம்பெறும் இரண்டு நிகழ்வுகள் இந்தப்போராட்டத்திலும் நடைபெற்றது.

நிகழ்வு 1:
ஒரு பிரபல நாளிதழைச் சார்ந்த பத்திரிக்கையாளர், துண்டுப்பிரசுரங்கள் வழங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதேவி எனும் தன்னார்வலரை அழைத்து “அரசாங்கம் என்னதான் சலுகை செஞ்சாலும் ஏன் இவங்க எல்லாம் செக்ஸ் ஒர்க் பண்றாங்க?” என்ற வழக்கமான, வரலாற்று சிறப்பு வாய்ந்த கேள்வியைக் கேட்டு பொதுச் சமூகம் இப்போதைக்கு திருந்தாது என்பதை நிரூபித்தார்.

நிகழ்வு 2:
எல்லாப் போராட்டங்கள் மற்றும் பேரணிகளைப் போல இந்தமுறையும், போராட்டத்தில்
அதிக அளவில் கலந்துகொண்டு காவல்துறை தங்கள் ஆதரவை பதிவுசெய்தது.

The post உரிமைக்கான போராட்டம் appeared first on ஓரினம்.


சென்னை 376 –ஒரு பார்வை

$
0
0

ஆகஸ்ட் 22, 2015 அன்று சென்னை தனது 376வது பிறந்தநாளைக் கொண்டாடி முடித்திருக்கிறது. இந்நிலையில், பல துறைகளிலும் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் மாற்றுப் பாலின/ பாலீர்ப்பு கொண்ட மக்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றி மாற்றுப் பாலின/ பாலீர்ப்பு கொண்ட மக்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சிலரின் கருத்துக்களைக் கேட்டோம்.

சிவ குமார் (சமூக ஆர்வலர், நிறங்கள் நிறுவனர்):

திருநங்கைகளுக்கான அங்கீகாரமும், மரியாதையும் ஓரளவிற்கு சென்னையில் கிடைக்கிறது. திருநங்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் திருநம்பிகளைப் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை. மேலும் ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்கள் மற்றும் ஈர்பாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான பொழுதுபோக்குகள் நிறையவே இருக்கிறது. ஆனாலும் அவர்களைச் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்களும் தினமும் நடந்துகொண்டே இருக்கிறது. ஓர்பாலீர்ப்பு கொண்ட பெண்களுக்கு திருமணம் போன்ற அழுத்தங்கள் பெருமளவில் உள்ளது. அவர்களால் அதிக அளவில் வெளியே வர இயலவில்லை.

பொதுவாகவே திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிற பொதுச் சமூகம் மற்ற மாற்றுப்பாலின / பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறது. சென்னை எனும் பெருநகரம் என்பதைத் தாண்டி, பொதுவாக மக்கள் எனும் முறையில் அணுகினால் முற்போக்குவாதிகள் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆணாதிக்கவாதிகளும், மதவாதிகளும் மாற்றுப்பாலின / பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரைப் பற்றி புரிந்துகொள்ளத் தயாராக இல்லை.

குறிப்பாகக் காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுப்பாலின / பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரைப் பற்றிய புரிதல் இல்லை. ஓரளவிற்குப் புரிந்துகொண்ட திருநங்கைகளையும் அவர்கள் மதிப்பதில்லை.


 

ஆர்த்தி (ஆராய்ச்சி மாணவர், ‘எனில்?’ இணைய இதழ்):

உலகில் இருக்கும் அத்தனை பாலினங்களும் சமமான நிலையை அடைய அரசு சார்ந்த சட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல, சமுக மாற்றங்கள் மிக அவசியம் என்பதை நாம் வாழும் இந்த சமுகம் தினம் தினம் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. மூன்றாம் பாலினம் என்று அரசு அங்கிகரித்த போதும் சமுகவெளியில் திருநங்கைகளையும், திருநம்பிகளையும் கேலி பொருட்களாக காட்சிப்படுத்தப்படுவதென்பது மிக இயல்பான ஒரு விடயமாக தான் இருக்கிறது. ஆண், பெண் என்று இரண்டு பாலினங்களை தவிர்த்து மற்ற பாலினங்கள் குறித்தான புரிதல் என்பது சென்னை போன்ற பெருநகரங்களிலும் மிக மிகக் குறைவான ஒன்றாகவே இருக்கிறது.

ஆண், பெண் தவிர்த்த மற்ற பால் அடையாளங்களை வெளிப்படையாகச் சொல்லி தெருவோரக் கடைகளில் தேநீர் அருந்துவது என்பது கூட இயலாத ஒன்றாகத் தான் இருக்கிறது. இருந்தும் பால் சிறுபான்மையினரின் மேன்மைக்காக பல அமைப்புகள் சென்னை போன்ற பெருநகர்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதென்பது நம்பிக்கையான விடயம். பேரணிகள், பால் சிறுபான்மையினர் சர்வதேச திரைப்பட விழா போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பான்மை பால் அடையாளங்களை உடையவர்கள் என்று சொல்லப்படும் இரண்டு பாலினங்களுக்கு மத்தியில் சிறு மாற்றங்களையாவது கொண்டு வரும் சக்திகளாக இருக்கின்றது என்பது தான் நம்பிக்கையின் நீட்சி.

ஆனால் பால் சிறுபான்மையினருக்கான அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே உள்ளது, குறிப்பாக ஓர்பால் ஈர்ப்பு கொண்ட பெண்கள் சார்ந்த முன்னெடுப்புகளும் மிக சிறிய அளவில் தான் இருக்கின்றது. இன்னும் சொல்ல போனால் பால் சிறுபான்மையினர் என்பதே “Gay” எனும் அளவில் முடிந்துவிடுகிறது ஆனால் நிஜத்தில் cross dressers, gender fluids, Asexual போன்றவர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராகவே இருக்கின்றார்கள்.

 

chennai_week
Photo Courtesy: Moulee

 

 

ப்ரியா தம்பி (எழுத்தாளர்):

பெருநகரமான சென்னையில் மிகப் பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. படித்தவர்கள் அதிகம் இருக்கும் அந்த நிறுவனங்களில் கூட பாலியல் சிறுபான்மையினர் தங்களது அடையாளங்களை மறைத்து வாழும் நிலையில் தன் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது பாலியல்/ பாலினச் சிறுபான்மையினருக்கு ஆதரவளிப்போரும் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுகின்றனர். கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் புரிதல் இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்களிடையே புரிதல் இருந்தாலும் ஏற்றுக்கொள்வது இல்லை.

பெருநகரங்களில் தலித் மக்கள் வாழ்வதற்கான பிரச்சினைகள் இல்லை என்பது போன்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் பெரும்பான்மையான தலித் மக்கள் தங்களுடைய தலித் அடையாளங்களுடன் வாழ முடிவதில்லை. அவர்கள் தங்களது அடையாளத்தை மறைத்தே வாழ்ந்து வருகின்றனர். அதே போலவே பாலியல் /பாலினச் சிறுபான்மையின மக்களும் தங்களது அடையாளத்தை மறைத்தே வாழ்ந்து வருகின்றனர்.

குடும்பங்களால் ஏற்றுக்கொள்ளப் படுவதும் மிகக் குறைவாகவே உள்ளது. அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறவர்கள் சாதி ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக மேல்தட்டில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு சமூக அந்தஸ்து கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக மருத்துவர்களிடையேயும் , மனநல நிபுணர்களிடையேயும் மாற்றுப் பாலியல்/ பாலின மக்கள் பற்றியப் புரிதல் மிகக் குறைவாகவே உள்ளது.


 

மாலினி (உதவி இயக்குனர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்):

சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் நிலைமை நன்றாகவே இருக்கிறது. நம்மைப்போல் நிறையபேரைப் பார்க்க முடிவதால் ஒருவருக்கொருவர் அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

மேலும் பெருநகரங்களில் வசிக்கும் படித்த மக்கள் உடல் சார்ந்த அரசியலைப் புரிந்து கொண்டுள்ளனர். ஆண், பெண் மற்றும் பாலற்றோரைப் பற்றிய தெளிவோடு உள்ளனர். ஆனால் ஒரு மாற்றுப்பாலின / பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினர் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தனது ஊரிலோ, கிராமங்களிலோ, சிறுநகரங்களிலோ வசிக்கும்போது கௌரவக்கொலை செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

ஆனால் மாற்றுப்பாலின / பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினர் சமுதாயத்துக்குள் புரிதல் என்பது குறைவாகவே இருக்கிறது.  ஓர்பால் ஈர்ப்பு கொண்ட பெண்கள் ஓர் அடைக்கப்பட்ட சுதந்திரத்துடனே வாழ்கின்றனர். அப்படியே அவர்களில் சிலர் வெளிவந்தாலும் கூட திருநம்பிகளால் வெளிவரமுடியாத சூழ்நிலை தான் நிலவுகிறது. மேலும் பாலற்றோரைக் குறித்த புரிதலோ, அவர்களை எப்படி அழைக்க வேண்டும் என்ற புரிதலோ குறைந்தபட்சம் சிறுபான்மையினர் சமுதாயத்திற்குள்ளாவது ஏற்படவேண்டும்.


 

ஆதம் (இசைக் கலைஞர்) :

புதிதாக சென்னைக்கு வருபவர்கள் சென்னையில் உள்ள மாற்றுப் பாலியல்/ பாலின மக்களின் ஒற்றுமையைப் பற்றிய ஒரு தவறான புரிதலுடனே பார்க்கின்றனர். ஆனால் அந்த ஒற்றுமை உண்மையானது அல்ல. எந்த ஒரு வேறுபாடுகள் மிகுந்த சமூகத்தைப் போன்றும் இந்தச் சமூகத்திலும் பிரச்சினைகள் உள்ளன.  ஆனால் அந்த பிரச்சினைகள் எல்லாம் கடந்தும் பேரணிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அல்லது கேளிக்கைகள் என்று ஒற்றுமையாக செயல்படவும் செய்கிறார்கள்.

LGBTQI மக்களுக்கான உரிமைகள் சரியான அளவில் கிடைக்கின்ற ஒரு வளர்ந்த நாட்டில் இருந்து வரும் ஒருவராக, இங்கிருக்கும் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளில் பெருமளவிலான பிரச்சினைகளை சந்தித்ததில்லை. அந்தப் பிரச்சினைகளைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும், வருத்தமாகவும், கோபமாகவும் இருக்கிறது. ஆனால் அந்த பிரச்சினைகளை சலனமே இல்லாமல் LGBTQI சமூகம் கையாளும் விதம் அருமையாக இருக்கிறது.


 

செல்வம் (அரங்கக் கலைஞர், சமூக ஆர்வலர்) :

சென்னையில் திருநம்பிகள் அதிக அளவில் இருந்தாலும் அவர்களுக்கு வீட்டிலிருந்து வெளியே வருவதென்பதே போராட்டமாக இருக்கிறது. திருநம்பிகளுக்கான அடிப்படை வாழ்வாதாரமே பிரச்சினையாக இருக்கும் போது அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்த சரியான புரிதல் இருப்பதில்லை.

மேலும் திருநம்பிகளுக்கான வேலைவாய்ப்பு என்பதும் அறவே இல்லாத நிலை தான் நிலவுகிறது. திருநங்கைகளுக்கு இருப்பதைப் போலவே திருநம்பிகளுக்கும் பால்மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாக வழங்குவதன் மூலமாக திருநம்பிகள் வெளிவருவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.


 

கனகா (மென்பொருள் வணிக ஆய்வாளர்):

சென்னையில் திருநங்கைகளைப் பற்றியும், ஒர்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களையும் பற்றி வேறு வேறு மாதிரியான புரிதல்கள் உள்ளன. திருநங்கைகளை ஒருவித பரிதாபத்துடன் ஏற்றுக்கொள்ளும் சமூகம் ஓர்பாலீர்ப்பை ஏற்றுக்கொள்வதில்லை. ஓர்பாலீர்ப்பை வெளிநாட்டுத்தாக்கம் எனும் கண்ணோட்டத்துடனே பெரும்பான்மை சமூகம் பார்க்கிறது. மேலும் திருநங்கைகள் கூட  பெண்களுக்காக வரையறுக்கப் பட்ட குணங்களுடன் இருக்கவே சமூகம் விரும்புகிறது.

பொதுவாக நிறுவனங்கள் கொள்கைரீதியில் மட்டுமே மாற்றுப்பாலின / பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரை அங்கீகரிக்கின்றன. ஆனால் உடன் பணிபுரிபவர்கள் மாற்றுப்பாலின / பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரை பற்றிய உரையாடலுக்குக் கூட தயாராக இருப்பதில்லை. ஆணுக்கு என்று சமுதாயம் வகுத்திருக்கும் கட்டமைப்புகளை உடைக்கும் ஒருவராக இருந்தால் அவரை ஏளனமாகவும், நகைச்சுவைக்குரிய பொருளாகவும் பார்க்கும் நிலை நிலவுகிறது.

என்ன தான் நாம் சென்னை, பெருநகரம் என்று கூறினாலும் அங்கு வசிக்கும் மக்கள் வேறு வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் இருந்து வந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அந்த மக்கள் மாறுவது வரை எதுவுமே மாறப்போவதில்லை.

The post சென்னை 376 – ஒரு பார்வை appeared first on ஓரினம்.

தொடர்-நூதன போராட்டம்

$
0
0

நண்பர்களே,

இந்திய சுதந்திர நாட்டின் பிரஜைகளான நாங்கள் எந்தவொரு சராசரி இந்தியக் குடிமக்களுக்கும் பொருந்தும் சமூக, பொருளாதார உரிமையை (இதுவரைக்கும் தரமறுத்து வந்ததை) இனியாவது தந்து இந்தியா தனது பிழையை திருத்திக்கொள்ள வேண்டுமென்றே கேட்கிறோம். இதற்காக தொடர்ந்து பல வருடங்களாக, எழுத்திலும், செயலிலும் போராடியும் வருகிறோம். சில வாரங்களுக்கு முன்பு கூட கல்வி-வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நாங்கள் போராடியது தங்களுக்கு தெரிந்திருக்கும்.

Photo Couresy: Living Smile Vidya
Photo Courtesy: Living Smile Vidya

அதனை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் எமது கோரிக்கைகள் பேசப்பட வேண்டுமென ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்திக்க முயன்று அது நடக்காத பட்சத்தில், பிற கட்சியை சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து எமது கோரிக்கைகளை வைத்தோம். அதன் பயனாக, கடந்த 31.08.2015 திங்கள் அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திருநர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் இலவச வீடுகள் வழங்குவது தொடர்பாகவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.லீலாவதி அவர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி அவர்கள், ”இந்தியாவில் முதல்முறையாக தமிழகதில் 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கிவருகிறது என்றும் தமிழக அரசு 2 திருநங்கைகளுக்கு அரசுவேலை வாய்ப்பு வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

40 வயது வரை பாலியல் தொழிலோ/பிச்சையெடுத்தோ வாழ்ந்துவிட்டு பிறகு மாதம் 1000 ரூபாய தருவதற்கு பதிலாக, எங்களுக்குரிய கல்வி வேலைவாய்ப்பினை முறையாகபெற ஆவண செய்து, எமக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பினை தர வேண்டுமென்பதே எமது கோரிக்கை.. மேலும், ஏதோ இரண்டு திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பணிநிரந்தரமற்ற ஒப்பந்த ஊழியத்தை (அதும், தனிநபர் போராட்டத்தின் பயனால் கிடைத்தது) திரித்து பேசுவது… சலுகைகளோடு ஓய்ந்துவிடுங்கள் உரிமைகளை எதிர்பார்பார்க்காதீர்கள் என சொல்வது போல உள்ளது.
அரசாலும், தொண்டு நிறுவனங்களாலும், கைவிடப்பட்ட நிலையில், பொதுமக்களான உங்களை நாடி வருகிறோம். எமது கோரிக்கை நியாயமானதா? இல்லையா? என்பதை பொதுமக்களிடமும், மாவட்ட ஆட்சியாளரிடமும் ஆகஸ்ட் 3, 2015 முதல் தொடர்-நூதன போராட்டமாக நடத்த உள்ளோம்.
இந்தியா எங்களை குடிமகள்களாக பார்க்காமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் நிச்சயம் நீங்கள் உங்களின் சகோதரிகளாகளே.. எங்களின் இத்தொடர் போராட்டத்திற்கு பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நேரடியாக வந்து ஆதரவு தரவேண்டும்.
மேலும், பன்னாட்டு நிதி ஏதுமின்றி இயங்கும் எமக்கு குறைந்தபட்சம் எமது பயண செலவுகள், உணவு மற்றும் பிற செலவுகளுக்கு வாய்ப்புள்ள தோழமைகள் பொருளாதார உதவி தந்து உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.ஆதரவு தரவிரும்பும் நல்லுள்ளங்கள் உள்பட்டியில் உடனடியாக தொடர்கொள்ளவும்.
நன்றி!!
இங்ஙனம்
Living Smile Vidya
மதிப்பிற்குரிய மங்கை
Glady Angel
போறாட்ட புகைப்படங்களுக்கு: http://photos.orinam.net/tagged/BeggingForDignity

The post தொடர்-நூதன போராட்டம் appeared first on ஓரினம்.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து

$
0
0

maadhorubaagan

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான மாதொருபாகன் (காலச்சுவடு வெளியீடு, நான்கு பதிப்புகள்) என்ற நாவல் தடை செய்ய நடக்கும் கொடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து ஓரினம் சார்பாக எங்கள் குரலை பதிவு செய்கிறோம். ஒரு சில அடிப்படைவாத வலது சாரி இந்துதுவ கட்சிகள், மற்றும் சில சாதிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு இப்பிரதி இலக்காகி உள்ளது. புத்தகத்தை தடை செய்ய கோருவதும், எழுத்தாளரை கைது செய்ய கோருவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதித்துள்ள கருத்துரிமைக்கு முற்றிலும் முரண்படுவதாக உள்ளது.

சிவனின் ஆண்பெண் வடிவமாகிய அர்த்தநாரி ஈஸ்வரனின் தமிழ் பெயரை தலைப்பாக கொண்ட இந்த புத்தகம் கொங்கு தமிழ் நாட்டின் மையப்பகுதியான திருஞ்சங்கோடு நகரத்தையும், அதன் கோவில் திருவிழா தொடர்புடைய வழக்கங்கள் என்று சிலரால் கருதப்படும் விடயங்களையும் குறித்து பேசுகிறது.

எனினும் இந்த புத்தகத்தின் சாரம் இதுமட்டுமல்ல என்பதை அறிகிறோம். இந்த புனைவில் ஆண்மை, பெண்மை மீது உள்ள வழக்கமான கருத்துகளுக்கு வேறொரு பரிமாணத்தை தந்துள்ளார் ஆசிரியர். குழந்தை இல்லாத அன்பான தம்பதியர்களான காளி மற்றும் பொன்னா பற்றியது இதன் முழு கதையும். முதன்மை ஆண் பாத்திரமான காளி மீது கட்டமைக்கப்பட்ட ஆண்மை கருத்தியல் எல்லா விதத்திலும் தோல்வி அடைகிறது. முதன்மை பெண் கதாபாத்திரமான பொன்னா குழந்தை பெறுவதற்காக முகமற்ற உடலுறவு சடங்கில் கலந்து கொள்வதன் மூலம் பெண்களுக்கான பாலியல் மரபுகளை கடந்து செல்கிறார்; அந்த இரவில் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதை தான் தேர்ந்து கொள்ளலாம் என்றதையும், தன் விருபதிற்கு இணங்க இருக்கும் ஒரு அழகான கடவுளுடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்பதிலும் தெளிவான சிந்தனையுடன் திகழ்கிறாள். மேலும் இந்த புத்தகம் பொது புத்தியில் புரியபட்டுள்ள தெய்வீக தன்மைக்கு ஒரு புதிய வடிவத்தை தருகிறது. கடவுள் என்று வரும் போது பெண் ஒருத்தி பகுத்தறியவும், ஒரு முடிவு எடுத்த பிறகு அதில் நிலையாக நிற்க முடியும் என்பதையும், சாதியற்ற அன்பின் உருவாய் மட்டும் திகழ்கிறான்/திகழ்கிறாள் என்பதையும் அழகாக உணர்த்துவதாக இருக்கிறது. இவ்வாறே தெய்வீகத்தின் தன்மைக்கு ஒரு புதிய வடிவத்தை தருகிறது. ‘கடவுள் தந்த குழந்தை’ என்று நாம் கேட்ட வாக்கியம் உண்மையில் எதை குறிக்கிறது என்பதை மறுசிந்தனைக்கு உட்படுத்துகிறது.

பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் மாற்று பாலியல்களையும், பால் அடையாளங்களையும் எதிர்க்கும், ஆணாதிக்க அடையாளத்தை கடை பிடித்து பெண்களை ஒடுக்க நினைக்கும் அதே எச்சரிக்கைவாதிகள் தான் இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த கதையில் வரும் திருச்செங்கோடு நகரின் பெயரை இனிவரும் பதிப்புகளில் இருந்து நீக்க எழுத்தாளர் முடிவு செய்துள்ளார் என்ற போதிலும் இந்த நாவலை தடை செய்வதே இவர்களின் நோக்கம். மாற்று பாலினத்தரை ஒழிப்பதும், ஆணாதிக்க அடையாளத்தையும், விதிமுறைகளை வலுப்படுத்துவதையும் எதிர்த்து போராடும் ஒரு முற்போக்கு அமைப்பாக செயல்படும் ஓரினம் பாலினம் அல்லது இலக்கியம் எதுவாக இருப்பினும் ஒடுக்கப்படுபவர்கள் பக்கமே என்றும் நிற்கும். ஓரினம் – எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

சமீபத்தில் பெருமாள் முருகன் தன் படைப்புகளை திரும்பி பெற்றுக்கொண்டார் என்பதை நாங்கள் அறிவோம். இந்த முடிவை அவர் மீண்டும் பரீசீலனை செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தாலும், அவர் சந்தித்த போராட்டங்களை எதிர்த்த முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம், மேலும் நீண்ட் சுயபரிசோதனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும் இந்த புத்தகம் எப்போதும் வாழும் என்பதை நாங்கள் குறிப்பிடுகிறோம் – அவர் படைப்புகளின் பிரதிகள் எங்கள் நூலகங்களில் உள்ளன. அதை நாங்கள் தீயிட மாட்டோம். இந்த படைப்புகள் இனி நாங்கள் நடத்தும் விழாக்களிலும் பங்குபெறும் விழாக்களிலும் தனி இடத்திலும் பொது வெளியிலும் வாசிக்கப்பட்டும், விவாதிக்கபடும்.

 

The post பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து appeared first on ஓரினம்.

“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு

$
0
0

தமிழ் சினிமா கண்ட மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு,

தங்களின் “ஐ”(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்கு பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறிக்கித்தனங்களுக்கும், நாயகவழிபாட்டிற்கெல்லாம் தஞ்சம் தரும் ஆலயம, “a Shankar film” தான் என்பதை அறியாதார் யார்?!

நியாயமான ஒரு படைப்பை புரிதலின்றி மததுவேசமாக சித்தரித்து அப்படைப்பையும், படைப்பாளியையும் பின்வாங்க செய்யும் அதேவேளையில் தான் உங்களின் படைப்புச் சுதந்திரத்தின் வெற்றியையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதே மத துவேசத்தை காரணம் காட்டி “’டாவின்சி கோட்’’ தடை செய்யப்பட்ட நாட்டில், இதே மத துவேசத்தை காரணம் காட்டி தற்காலிக தடை செய்யப்பட்டு, அதுவே பெரும் விளம்பரமுமாகி வணிக வெற்றியும் அடைந்த ‘’விஸ்வரூபம்’’ படம் வெளியானதும் இங்கேதானே…

ஆனால், தாய்நாட்டு அகதிகளான, பாலியல் வெறியர்களான, அருவெருப்பான சமூக விரோதிகளான எங்களை எப்படியும் சித்தரிக்ககூடிய அருகதை கொண்ட தங்களைப் போன்ற மகா கலைஞர்களை மட்டும் யாரும் எதுவும் கூறப்போவதில்லை.

சமீபகாலமாக வலைதளங்களில் திரைப்படங்களை துவைத்து, கிழித்து தொங்கபோடும் வலைதள விமர்சகர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்குகூட இந்த ‘ஐ’ படம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் தான். இம்மொக்கை கதை, திரைக்கதையை கலாய்த்த அளவிற்கு ஒன்பதுகளை காயப்படுத்தியதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக ஒரு விமர்சகர் ‘’ இதில் ஒரு ‘நயன்’தாரா வேறு வில்லன்..!!’’ என்று எழுதியிருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஆபத்தான ரசனையை வளப்படுத்திய விதத்தில் நீங்கள் உள்ளம் குளிர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரம்மாண்டம், பிரம்மாண்டமான செட், பிரம்மாண்டமான கலைஞர்கள், அதிபிரம்மாண்டமான பட்ஜெட் தாண்டி ’’அதற்கும் மேல’’யும் சில விசயங்கள் இருப்பதை தங்களின் பிரம்மாண்ட மூளைக்கு முன் பகிர்ந்து கொள்ள இச்சிறுமதியாள் விரும்புகிறேன்.
”சிவாஜி” படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்ன கலைவாணர் அவர்கள் ‘’இப்பத்தான் ஆப்பரேசன் பண்ணிட்டு வந்திருக்கு’’ என்று ஏளனமாக கூறியதும் ‘’சீ..சீ…’’ என்று அருவெறுப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதை தூசி தட்டி தற்போது ’’அதற்கும் மேல’’ ப்ரம்மாண்டமாய் காறி துப்பியதைத் தான் பேச விரும்புகிறேன்.

வழக்கமான நாயகன் போலவே இதிலும் விக்ரம் அவர்கள் மிக ஆண்மையுடன் வில்லனை பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே ‘’டே… பொட்ட..’” என்கிறார். நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னை போன்ற பொட்டை பிறவிகளும் தமிழ் சினிமாவின இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றிக்கு நன்கு பழகியிருக்கிறோம். விக்ரம் அவர்களுக்கும் கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த பாலா அவர்களின் ’’சேது’’ படத்தில் கூட “டே.. இப்பிடி பண்ணி பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப்போற…” என்று சொன்னவர்தான். அதற்கு பிறகு இச்சொல்லாடலை அவர் பயன்படுத்தாத படங்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருகக்கூடும்.

‘’சதுரங்க வேட்டை’’ என்னும் சமூக அக்கறை கொண்ட படமியக்கிய திரு.வினோத் அவர்களே ‘’பொட்ட’’ என்று சொல்லாடலை எளிதாக பயன்படுத்துகையில்,, அதனை பிரபல திரைவிமர்சகர்களான கேபிள்சங்கர்களும் சப்பைக்கட்டு கட்டும் போது, உங்களிடம் மட்டும் அந்த கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்.

அதுசரி உங்களால் ’’பொட்டை’’ என்று அறியப்படும் நாங்கள் உங்கள் ஆண்மை பராக்கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்து விட்டோம்?! உள்ளம் முழுதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம்பாலினத்திற்கு நேர்மையாக இருக்கிறோமே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? திருநங்கையாக குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவர துணிச்சல் இருக்கிறதே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? இந்திய பிரஜைக்குரிய சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு தாய்நாட்டு அகதிகளாவோம் என்பதை அறிந்தும் திருநங்கையாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறோமே ’’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? பெற்றோர்களின் சொத்துசுகம் எதுவிமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை நிர்கதியாக துவங்கி அடுத்தவர்களை சாராமல் வாழ்கிறோமே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரம்ம் சிறந்த்து? தெருவிலும், வெள்ளித்திரையிலும் உங்கள் ஆண்பராக்கரசாளிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளை துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறொமே ’’அதற்கும் மேல’’வா உங்கள் ஆண்மை பராக்கிரமம் வாய்ந்தது? அல்லது ‘பொட்டைகள்’ சோத்தில் உப்பு போட்டு தின்பதில்லை என்பது உங்களின் திண்ணமான எண்ணமா??

”ஐ” என்ற தலைப்பிற்கேற்ப ஐந்து வில்லன்கள் வேண்டுமென்று யோசித்தது சரி. அதற்கும் மேலே, கதைக்களத்திற்கேற்ப அதே துறைசார்ந்த வில்லன்களாக வைத்த உங்களின் மெனக்கெடலை பாராட்டுகிறேன்.. அதற்கும் மேல, பிரம்மாண்டமாக, ரிச் லுக்குடன், அதேசமயத்தில் வித்தியாசமான, காமடியான, வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாக திருநங்கையை வைத்த்தையும், அதுவும் ஆதண்டிக்காக இருக்க வேண்டுமென்பதற்காக உலக அழகியையே, அழகாக காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜினியையே ( எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயை அழகாய் காட்டியவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்கவைத்ததில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன். ஆனால், அந்த கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜபேரான ஓஜாஸ்’யையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?

தான் வியக்கும், விரும்பும் அழகியாலயே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஸ்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், ஓஜஸ் மீது நாயகனுக்கும், நண்பனுக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வையேன் வருகிறது. எல்லா இன்னல்களையும் கடந்து பல திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள் தான். ஆனாலும், அவர்கள் ஏளனத்திற்குரியவர்கள், என்பதை பார்க்கும் ரசிகர்கள் மனதில் உறுதியாக விதைக்கத்தானே?!. தமிழ் ரசிகர்களே திருநங்கைகளை கலாய்க்க, ‘’காஞ்சனா’’ (திருநங்கைகளை சற்று கண்ணியமாகிய படம் என்றாலும், இறுதியில் அதையும் கலாய்க்க பயன்படுத்தும் ரசிகர்களை எண்ணி வியக்கேன்..!!) என்று அழைக்க அப்டேட் ஆகியிருக்கும் நிலையில் ‘’ஊரோரம் புளியமரம்..” என்று பாடுவது எதனால்? நீங்கள் எதிர்பார்த்ததை போலவே அந்த காட்சியில் ரசிகசிகாமனிகள் அரங்கம் அதிர சிரித்தார்கள்தான். என்ன அந்த அருவெறுப்பான சிரிப்பை மீறி, முதல்வன் படத்தில் வரும் புகழின் அம்மாவைப்போல என்னைப் போன்ற ‘பொட்டை’களை பெற்ற அம்மாக்களின் கேவல்கள் உங்கள் காதை எட்டியிருக்காது.

அதெப்படி, வெறும் திரையிலும், பொஸ்டர்களிலும் மட்டுமே கண்ட ஒரு அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஒரு ஆணழகன் காதலித்துவிடமுடியும், அதுவும் உண்மையான, நியாயமான, கல்மிஷம் இல்லாத காதலாகிறது., குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் ஒரு அழகியால், ஆணழகனை பரிசுத்தமாக காதலிக்கு முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் எப்படி தங்களுக்கு அவ்வளவு நாராசமானதாகிறது. அவள் காதல், நாயகனால் மட்டுமல்ல, நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பர பட இயக்குநராலும் அருவெறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அதாவது இப்படத்தின் இயக்குநராகிய நீங்கள் வெறுப்பதைதான் சூசகமாக கூறுகிறீர்கள் இல்லையா?

அவரை ரிச்-திருநங்கையாக, காட்ட ஆரம்பத்தில் அழகான கேமரா ஆங்கிளை பயன்படுத்திய நீங்கள். அவரது காதல் புறக்கணிக்கப்படும் கணம் முதல் அவரை அசிங்கமாக மட்டுமே காட்ட பயன்படுத்திய காமிரா ஆங்கிளில் அசிங்கமாக தெரிந்தது ஓஜஸ் மட்டும் இல்லை நீங்களும்தான் என்பதை உணர்ந்தீர்களா?

இவ்வளவு வரைக்குமே உங்களிடம் நாகரீமாகத்தான் கோவம் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால், “9’” என்ற அறையெண்ணை காட்டி பின் ஓஜாஸை காட்டிய உங்கள் அரதபழசான, அருவெறுப்பான விளையாட்டை எண்ணி என்னால் கெட்டவார்த்தைகளால் வசைபாடாமல் இருக்கமுடியல்லை. ஏனெனில், இதே ‘’9’’ என்ற சொல்தான், என் பள்ளிகாலம் முழுதும் முள்ளாக குத்தி, கண்ணீர் சூழ சக மாணவர்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்தியது. இதே ‘’9’’ என்ற சொல்தான், இப்போதுவரையிலும் எந்த அற்பனும் என்னை சிறுமைபடுத்த பேராயுதமாக பயன்படுத்துகிறான். அவற்றோடு கூடுதலாக சமூகம் கற்றுக்கொடுத்த கெட்டவார்த்தைகள்தான் இப்போது என் கைவசம் இருப்பவை.

இருந்தாலும், கேபிள்சங்கர் போன்ற விமர்சனசிகாமனிகள் எனக்கு ‘நாகரீக வகுப்பு’ எடுப்பார்களே என்று அஞ்சி நானாகவே நாகரீகமாகவே தொடர்கிறேன்.

’’இப்படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை’’ என்ற டிஸ்க்லைமருடன் துவங்கும் இப்படத்தில் தான், கிடைக்கும் ஒரு வாய்ப்பை கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத்திறனாளிகள் வரை காயப்படுத்த தங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது சென்சார் போர்ட். அதன் தாராள மனதை கண்டிக்காமல் உங்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன பயன்?

ஒரேயொரு படத்திற்காக இத்தனை மெனக்கெடலையும், கடின உழைப்பையும், தனது நேரத்தையும் கொடுத்து மகாகலைஞனாக உயர்ந்து நிற்கும் விக்ரமிடம் இதுபோன்ற அற்பகாட்சிகளின் நடிக்க வேண்டாமென என்னால் வேண்டுகோள் கூட வைக்கமுடியவில்லை. ஏனெனில், அடுத்த உலகநாயகனாக வேண்டுமென துடிக்கும் அவரது ஆதர்ச நாயகனான கமலும் கூட, வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கியவாதிகள் ஈசிக்கொள்ளும் அதே கமல்ஹாசன் அவர்களும்தான் ‘பொட்டை’என்னும் சொல்லாடலை தொடர்ந்து தமது படங்களிலும், “அதற்கும் மேல” ‘’வேட்டையாடு, விளையாடு’’ படத்தில் திருநங்கைகளையும், சமபால் ஈர்ப்பினரையும் தனது பங்கிற்கு சிறப்பாக மலினப்படுத்தியிருக்கிறாரே…

உங்கள் இருவருக்கும் மட்டுமன்றி, அனைத்து நடிகர்கள், காமடியன்கள், இயக்குநர்களுக்கும், ஒரேயொரு தகவல்.. நீங்கள் கொண்டாடும் ஆண்பராக்கிரமசாளிகள் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் ஏலியனாக கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான். எங்கள் வீட்டிலும் டிவி பெட்டி உண்டு. நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அதுமட்டுமல்ல தவறாமல் சோற்றிலும் உப்பு போட்டுதான் சாப்பிடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


* English translation by PT is here
** Image source: HosurOnline.com

The post “ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு appeared first on ஓரினம்.

தில்லி மாற்றுப் பாலின-பாலீர்ப்பு சுயமரியாதை விழாவில் தலித் குரல்கள்

$
0
0

மொழிபெயர்ப்பு : கிரீஷ்

நவம்பர் 29, 2015 அன்று டெல்லியில் மாறுமட்டோருக்கான எட்டாவது ஆண்டு பேரணி நடைபெற்றது. மாறுபட்ட பாலின-பாலீர்ப்பு கொண்ட மக்கள், அவர்களது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலவாரியான மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். வழக்கமான பேரணிகளை போல் இல்லாமல் இந்தமுறை  சாதீயத்திற்கு எதிராக ஒரு அழுத்தமான அறிக்கை வெளியிடப்பட்டது.

பேரணியின் முடிவில் அகில் கங், துருபோ ஜோதி மற்றும் திரேன் போரிஸா என்கிற மூன்று தலித் மாற்றுப் பாலினத்தவர்கள் அந்த அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கை:

ஒழுங்கீனமானவர்கள், தவறானவர்கள், இயற்கைக்கு மாறானவர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள  நாம் எல்லோரும் இந்த சமயத்தில்  ஒன்றாக இணைந்துள்ளோம்.

மாறுபட்டவர்களாக இருப்பதிலும், நம்மை வேறு யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாதவர்களாக இருப்பதிலும் நாம் பெருமை கொள்கிறோம். நமது வேறுபாட்டை, நமக்குள் இருக்கும் வேறுபாட்டை, நமக்கு இடையே இருக்கும் வேறுபாட்டை நாம் கொண்டாடுகிறோம்.

ஆனால் ஒரு தலித்தாக எங்களது சாதி அடையாளங்களை ஒப்புக்கொள்ளாமலும், கொண்டாடாமலும் நாங்கள் பெருமையடைய முடியாது.

எங்களைப் பொறுத்தவரையில் வெளிவருதல் என்பது எங்களது பாலீர்ப்பை மட்டுமல்ல, எங்களது சாதியை வெளிப்படுத்துவதும்  சேர்த்து தான்.

யார் யாருடன் வாழ வேண்டும் என்கிற சமுதாயக் கட்டமைப்புகளை சமுதாயப் படிநிலைகளுடன் இணைத்தே உடைக்க விரும்புகிறோம்.

நாங்கள் எங்களுடைய வேறுபாட்டைக் கொண்டாடுகிற அதே நேரம் எங்களது சக ஒடுக்கப்பட்ட தோழர்கள் தினம் தினம் அவர்களது வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களையும் பெருமையுடன் நினைவு கொள்கிறோம்.

அனைவருக்கும் சாதி இன்னமும் உயிரோடு இருப்பதையும்,  அது சமூகத்தில் புரையோடிப் போய் இருப்பதையும் நினைவு படுத்த விரும்புகிறோம். எங்களது வாழ்க்கையில், நமது நகரங்களில், நமது

நாட்டில் நிரம்பியுள்ள சாதி எங்களது உயிரை மட்டுமல்ல, எங்களது கலாச்சாரம், வரலாறு மற்றும் அடையாளத்தையும் சேர்த்தே அழிக்கிறது. கிராமப்புற இந்தியாவில் உள்ள எங்களது தலித் குழந்தைகளை அவமானப்படுத்துவதோடு அவர்களது குரல்வளையையும் நெறிக்கிறது.

ஒருவரை ஒடுக்க நினைக்கும் பொதுச்சமூகம் தாழ்த்தப் பட்டவர்களையும், மாற்றுப் பாலின-பாலீர்ப்பு கொண்ட மக்களையும் ஒரே போலவே நடத்துகிறது. எனவே மாறுபட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறோம்.

எனவே எதிர் பாலீர்ப்பு வழமையின் வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு எதிராக மட்டுமல்ல, சாதிக்கட்டமைப்புகளுக்கு எதிராகவும்  நாம் இணைந்திருப்போம். வாழ்த்துகள்!

The post தில்லி மாற்றுப் பாலின-பாலீர்ப்பு சுயமரியாதை விழாவில் தலித் குரல்கள் appeared first on ஓரினம்.

ஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும்

$
0
0

Nanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின் ’netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது. நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.

“நான் டாஸ்மானியா மாநிலத்தின் சிறிய நகரத்தில் வளர்ந்தவள். டாஸ்மானியா அற்புதமான இடம். அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நாள் அந்த மாநிலத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஒரு கடிதம். அன்புள்ள மேடம் என்று துவங்கிய அந்தக் கடிதம் என்னை மாநிலத்தை விட்டு வெளியேற சொன்னது. நான் என்னை ஓரளவிற்கு லெஸ்பியனாக உணர்பவள். என்னுடைய மாநிலத்தில் 1997-வரை தன் பாலின உறவானது சட்டப்படி குற்றம். என் ஊரை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு மோசமான விஷயம். தன்பாலின உறவில் ஈடுபடுவர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவின் மையப்பகுதிக்கு மொத்தமாக ஓடிபோய் விட வேண்டும். மறந்து கூட மீண்டும் டாஸ்மானியா வரவேண்டும் என்று எண்ணக்கூடாது.

நான் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், என்னைக் குறித்தும் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளை உதிர்ப்பேன். தன்பாலின உறவுகள் எப்படி அச்சத்தோடும், ஐயத்தோடும் அணுகப்படுகின்றன எனப் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளைக் கூட்டத்தினர் சிரிக்க வீசிக்கொண்டே இருப்பேன்.

நான் என்னைப்போன்ற லெஸ்பியன் மக்களின் உணர்வுகளை, சிந்தனைகளைப் போதுமான அளவுக்கு மக்கள் முன் கொண்டு சேர்த்ததில்லை என உணர்கிறேன். ஒரு பெண் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியின் முடிவில், ‘போதுமான அளவுக்கு லெஸ்பியன் நகைச்சுவை இல்லை’ என்று குறைபட்டுக் கொண்டார். என்னை லெஸ்பியன் நகைச்சுவை கலைஞர் என அறிமுகப்படுத்துகிறார்கள். நான் லெஸ்பியனாக இருப்பதை விட, அதிக நேரத்தை சமைப்பதில் செலவிடுகிறேன். என்னை ஏன் சமையல் கலையில் அசத்தும் நகைச்சுவை கலைஞர் என்று யாரும் அறிமுகப்படுத்துவது இல்லை? நான் அனேகமாக இவ்வகையான நகைச்சுவை நிகழ்ச்சிகளை மொத்தமாக முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

நான் நகைச்சுவை கலைஞராக எப்படி உருவெடுத்தேன்? என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா? இல்லை. அது தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது. நான் என் குரலை பிறர் கேட்க வேண்டும் என்பதற்காக, பிறர் என்ன பேச அனுமதிக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே இழிவுபடுத்திக் கொள்வது. இனிமேல், அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன். என்னையோ, என்னைப் போன்றவர்களையோ இழிவுபடுத்தும் விஷயங்களை நகைச்சுவை என்கிற பெயரில் நிச்சயம் மேடைகளில் நிகழ்த்த மாட்டேன்….

என்னை நான் லெஸ்பியன் என்று கூட அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டேன். இந்த அடையாளத்தை விட்டும் நான் வெளியேறக்கூடும். என்னை நான் ‘சோர்ந்து போனவர்’ என்று வேண்டுமானால் அடையாளப்படுத்திக் கொள்வேன். நான் சோர்ந்து போயுள்ளேன் . பாலினம் என்பது இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திரியும் உங்களைப் போன்றவர்களால் நான் அயர்ச்சி அடைகிறேன். நீங்கள் வேறுபட்டவர்கள். எல்லாரும் உங்களைப் போல இருக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இயங்குபவர்கள். சாந்தம் கொள்ளுங்கள் அன்பர்களே.

கொஞ்சம் முடியோடு பிறந்திருக்கும் பெண் குழந்தையை, ‘ஆம்பிள பிள்ளையா’ எனப் பிறர் கேட்கிறார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு உரிய அடையாளங்கள் என்று நீங்கள் கருதும் அடையாளங்களால் ஏன் நிறைக்கிறீர்கள்? யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது? ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அதைக்குறித்து அக்கறை கொள்வதே இல்லை. நம்முடைய கவனம் முழுக்க வேற்றுமைகளில் மட்டுமே குவிந்து இருக்கிறது. ‘Men are from Mars, Women are for his penis’

என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு பலர் என்னை ஆண் என்று எண்ணிவிடுவார்கள். பிறகு உண்மை தெரிந்ததும் அதற்காக வெகுவாக வருந்துவார்கள். விமானத்தில் ஏறிய போது. ‘வாங்க சார்’ என்று அன்போடு விமானப் பணி ஆண் அழைத்தார். பின்னர்ப் பெண் என உணர்ந்து கொண்டு அதிர்ந்து போய் மன்னிப்பு கேட்டார். என்னை ஆண் என்று பிறர் கருதும் கணங்களில் எந்த முயற்சியும் இல்லாமலே பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அதிகாரம் செலுத்த முடிகிறது….ஆனால், நான் நேர் பாலின உறவு கொள்ளும் வெள்ளையின ஆண் என அறியப்பட விரும்பவில்லை. அப்படிப்பட்ட அடையாளம் எனக்குப் பல மடங்கு கூடுதல் சம்பளத்தைத் தரும் என்றாலும் எனக்கு அந்த அடையாளம் வேண்டாம்….

இதுவரை மானுடத்தின் முகமாக இருந்த வெள்ளையின ஆண்கள் காட்டிக்கொண்டார்கள்.  திடீரென்று ‘நீங்களும் மனிதர்களில் ஒரு வகை’ என்பதை நாம் முதன்முறையாக உரக்க சொல்லும் போது அதனை எதிர்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களை ‘வெள்ளையின ஆண்’ என்று விளித்தால் ‘reverse-racism’ எனக் கதறுகிறார்கள். என்னை, என்னுடைய உருவத்தை, பாலின தேர்வை பல்வேறு வகைகளில் கேலி செய்யும் விதிகளை இயற்றி தந்தவர்கள் நீங்கள். உங்களுடைய படைப்பான விதிகளை உங்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறோம். அவ்வளவே

“ஆண்களை இவ்வளவு வெறுக்கும் நீ, ஏன் எங்களைப் போல ஆடை அணிகிறாய், காட்சி அளிக்கிறாய்” எனக் கேட்கிறார்கள். “மச்சி! உங்களுக்கு நல்ல முன்மாதிரி வேண்டும் இல்லையா. அதற்காகத் தான்”. என்பதே என்னுடைய பதில். உங்களுடைய அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ள முனையாமல், திறந்த மனதோடு அணுகுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். …

இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் உதிர்க்கப்படும் நகைச்சுவை துணுக்குகளின் வடிவம் எளிமையானது. அவை முதலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும். பின்னர் ஆச்சரியப்படுத்தும் வகையில் அது முடிவுக்குக் கொண்டு வரப்படும். ஆனால், நான் முழுக்கப் பதற்றங்களால் நிரம்பியிருக்கிறேன். நான் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், எனக்கு வேறென்ன செய்வது என்றும் தெரியவில்லை.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலை வரலாற்றில் நான் பட்டம் பெற்றேன். கலை வரலாற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்வது என்னுடைய உலகம் இல்லை. அது எனக்கான உலகம் இல்லை. கலை என்பது மக்களை மேம்படுத்துவது இல்லையா? என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சி உங்களை மேம்படுத்தும் என்று நான் உறுதி தரமாட்டேன். நாம் உருவாக்கிய கசடுகுகளில் நம்மை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மன உளைச்சலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தேன். நிகழ்வு முடிந்ததும் என்னிடம் வந்த ஒரு நபர், “கலைஞர்கள் தான் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முயலக்கூடாது. வான்கா மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் மெச்சும் ‘சூரிய காந்திகளை’ப் படைத்திருக்க முடியாது ” என்று அறிவுரை தந்தார். நான் கற்ற கலை வரலாறு இப்படிக் கைகொடுக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது.

“வான்கா மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார் என்பது உண்மையே. ஆனால், அவர் மருந்துகள் உட்கொள்ளாமல் இல்லை. அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டார். பல்வேறு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை தந்தார்கள். அவருக்குச் சிகிச்சை தந்த மனநல மருத்துவர்களின் ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். அதிலும் ஒரு ஓவியத்தில் மனநல மருத்துவர் foxglove மலர்களோடு நிற்கிறார். அந்த மலர்கள் வலிப்புக்கு வைத்தியம் பார்க்க உதவுபவை. கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால், சுற்றியிருப்பவை அடர்மஞ்சளாக அம்மருந்து தெரிய வைக்கும். ஆகவே, மருந்து உண்டதால் தான் வான்கா சூரியகாந்தியை படைக்க முடிந்தது. நீங்கள் இன்புற ஏன் கலைஞர்கள் துன்பத்தில் உழல வேண்டும். அவர்களின் படைப்புத்திறனுக்குத் துயரம் என்கிற சுமையை ஏன் விதிக்கிறீர்கள். உங்களுக்குச் சூரியகாந்தி வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கி வளர்த்து ரசித்து விட்டுப் போங்கள். கலைஞர்களைக் காவு கேட்காதீர்கள்.” என்றேன்.

அவர், ‘ரொம்பக் கொதிக்காதீர்கள்’ என்றார். நான் மென்மையாகச் சொன்னேன். ‘நான் கொதிக்கவில்லை. உணர்வதை வெளிப்படுத்துகிறேன்”. ‘கொதிக்காதே/உணர்ச்சிவசப்படாதே’ என்று என்னிடம் சொல்பவர்கள் எல்லாம் அதைக் காட்டுக்கத்தலில் தான் சொல்கிறார்கள். குசு, மூக்கை பார்த்து ‘உன்கிட்டே ஒரே நாத்தம், சுத்தமா இரு’ என்றதை போலத்தான் இந்த அறிவுரை இருக்கிறது. என்னுடைய உணர்ச்சிகளும், கொதிப்பும் தான் என்னுடைய சிக்கலான வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வலிமையோடு பயணிக்க உதவியிருக்கின்றன. உணர்வற்று வாழ்வது இயலாத ஒன்று.

என் அம்மாவோடு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையின் துயர்கள் குறித்து நகைச்சுவையாக நானும், அவரும் அவ்வப்போது பேசிக்கொள்வோம். அன்றைய தினம் உரையாடல் அப்படிப் பயணிக்கவில்லை. அவர், என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உங்கள் ஐந்து பேரையும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்த்தேன். ஆனால், உன்னை நேர் பாலின ஈர்ப்பு கொண்டவள் என்று கருதிக்கொண்டு வளர்த்து விட்டேன். வேறு எப்படி வளர்ப்பது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடு மகளே. என்னை மன்னித்துவிடு. நீ தன்பாலின ஈர்ப்புள்ளவள் என்று தெரிந்த போது, உன் வாழ்க்கை கடினமானதாக இருக்கும் என்று உனக்கு முன்னரே எனக்குத் தெரியும். உன்னை நேர் பாலின ஈர்ப்புள்ளவளாக மாற்ற முயன்றேன். நான் உன் வாழ்க்கையைத் துயரம் மிக்கதாக ஆக்கிவிட்டேன். இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ளாது எனத் தெரிந்ததால், உன்னை மாற்ற முயன்றேன் மகளே. மன்னித்துவிடு” என்று அரற்றினார்.

நான் திகைத்து போனேன். என்னுடைய கதையின் நாயகியாக எப்படி என் அம்மா மாறினார்? வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா? கதைகளுக்கு ஆரம்பம், மையம், முடிவு என்று மூன்று பகுதிகள். நான் முன்னரே சொன்னதைப் போல நகைச்சுவைக்கோ இரு பகுதிகள் மட்டுமே. என்னுடைய நிஜ வாழ்க்கையின் வலிகளை இந்த நகைச்சுவை சரியாகக் கடத்தவில்லை. நகைச்சுவைக்கு என்று நான் உருவாக்கும் பன்ச்லைன்கள் உண்மையின் வலியை சிதைக்கின்றது.

எனக்குள் இன்னமும் என் அடையாளம் குறித்த அவமானம் இருக்கிறது. என் சிந்தனையில் அந்த அவமானம் அறவே இல்லை. ஆனால், என் உணர்சிகளில் அவமானம் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. என் பாட்டியை நான் நெடுங்காலமாக நேரில் பார்க்கவில்லை. என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் வளர்ந்தது டாஸ்மானியாவின் வடமேற்கு பகுதி. அதற்குப் பைபிள் பகுதி என்று பெயருண்டு. 1989-1997 காலத்தில் தன்பாலின சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்று பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. அது என்னுடைய வளரிளம் பருவமும் கூட. என் பகுதி மக்களில் 70% தன் பாலின சேர்க்கையில் ஈடுபடுவர்களைக் கிரிமினல் சட்டங்களில் சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. என்னை வளர்த்த, அன்பு செய்த, நான் நம்பிய மக்கள் தன்பாலின சேர்க்கையைப் பாவமாகக் கருதியது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களைக் கொடூரமானவர்கள், ஈவிரக்கம் அற்றவர்கள், குழந்தைகளோடு உடலுறவு கொள்ளும் காமுகர்கள் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள்.

நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பது வெளிப்பட்ட போது காலம் கடந்து விட்டிருந்தது. நான் என்னுடைய அடையாளத்தை, தன் பாலின ஈர்ப்பை வெறுப்பவளாக மாறியிருந்தேன். ஒரு ஸ்விட்சை அமுக்கிய உடனே மாறிவிடக் கூடிய உணர்வு அல்ல அது. தன்பாலின ஈர்ப்பை வெறுப்பது உள்ளுக்குள் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. இதனால், எங்கள் அடையாளத்தை நாங்களே வெறுக்க ஆரம்பிக்கிறோம். முழுக்க முழுக்க எங்களை நாங்களே வெறுத்து வேகிறோம். அவமானத்தால் கூனிக்குறுகி பத்தாண்டுகள் இருட்டில் இருந்தேன். அந்த இருட்டு என்னைப் பிறர் பார்ப்பதில் இருந்து மட்டும் தான் காக்க முடியும். நான் அவமானத்தில் உழல்வதை அதனால் தடுக்க முடியாது இல்லையா?

ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே மூழ்கடித்தால், அந்தக் குழந்தையால் தான் சுயமரியாதை உள்ளவள்/ன் என்கிற எண்ணத்தை உள்வாங்கிக் கொள்ளவே இயலாது. தன்னைத் தானே வெறுப்பது என்பது வெளியில் இருந்து ஊன்றப்படும் விதை. அது ஒரு குழந்தையின் மனதில் விதைக்கப்பட்டால், அது முட்செடியாக மாறுகிறது. வேகமாக வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது. புவி ஈர்ப்பு விசையைப் போல அது நீக்கமற நிறைந்து விடுகிறது. இயல்பான ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. என்னுடைய இருட்டை விட்டு வெளியே வந்த போது என்னிடம் நகைச்சுவை இருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதிலும், என்னை நானே வெறுப்பதிலுமே என் கவனம் இருந்தது. அடுத்தப் பத்தாண்டுகளில் எனக்கான வெளியை கண்டடைந்தேன். ஆனால், என் வாழ்க்கையின் துயர்களை நகைச்சுவைக்கு நடுவே மறைத்துக் கொண்டேன். என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்லியே ஆகவேண்டும்,

யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பாடத்தை நான் அதிகவிலை கொடுத்துக் கற்றுக்கொண்டேன். அந்தப் பாடம் தன்பாலின ஈர்ப்பை பற்றியது அல்ல. பொதுவெளியில் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் எப்படி விவாதிக்கிறோம்? அது சிறுபிள்ளைத்தனமானதாக, வெறுப்பு வழிவதாக, அழிவுக்கு அறைகூவல் விடுப்பதாக இருக்கிறது. நாம் யாருடன் முரண்படுகிறோமோ அவர்களை விட நியாய உணர்வு மிக்கவர்கள் என்று காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம். அவர்களின் மனித நேயத்தை நம்முடைய கருத்துக்களின் மூலம் தட்டி எழுப்ப நாம் முனைவதே இல்லை. அறியாமை நம்மிடையே எப்போதும் நடமாடி கொண்டே இருக்கும். யாருக்கும் அனைத்தும் தெரியாது.

நான் உலகத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய கலை வரலாறு படிப்புக் கற்றுக்கொடுத்தது. இந்த உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்று நான் மெத்தனப்படவில்லை. கலை வரலாற்றைப் பொறுத்தவரை பெண்கள் இரு வகை மட்டுமே – கற்புக்கரசி, வேசி. ஆணாதிக்கம் சர்வாதிகாரம் இல்லை. அது ஒரு பெண்ணுக்கு இரண்டு தேர்வுகளைத் தருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நாம் உய்ய வேண்டும். மேற்கத்திய ஓவியங்களில் வந்து செல்லும் பெண்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள், சதைப்பிண்டங்கள்…. நான் இந்த உன்னதக்கலையை அதன் உண்மையான பெயர் சொல்லி அலைக்கப்போகின்றேன். அது ‘bullshit’! ஆண்கள் தங்களுடைய ஆசனவாயின் மலர்களை ஏந்தும் ஜாடிகளாகப் பெண்களைக் கருதி வரைந்தவையே இந்த மேற்கத்திய ஓவியங்கள்…

நான் பாப்லோ பிகாசோவை வெறுக்கிறேன். அவர் நவீன ஓவியக்கலையின் க்யூபிசத்தைத் தந்தவர் என்பதால் அவரை நீங்கள் வெறுக்கக் கூடாது என்பார்கள். பிகாசோ மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த மனநோயின் பெயர் பெண் வெறுப்பு. பெண் வெறுப்பு மனநோயா என்று நீங்கள் அதிரக்கூடும். ஆம், தன்பாலின ஈர்ப்பற்ற ஆண்களுக்கு இருக்கும் பெண் வெறுப்பு மன நோயே ஆகும். பிகாசோ மனநோயாளி இல்லை என்று கற்றறிந்த அறிஞர்கள் சொல்வார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பிகாசோவின் ஒரு மேற்கோள் இது, ‘ஒவ்வொரு முறை ஒரு பெண்ணை விட்டு விலகும் போதும் அவளை எரிக்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணை, அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த காலத்தை மொத்தமாக அழித்துவிட வேண்டும்.’ அவர் பதினேழு வயதே ஆன மரியா தெரசா வால்டர் என்கிற பெண்ணோடு உடலுறவு கொண்டார். அந்தப் பெண் சட்டப்படி வயது வந்தவர் கிடையாது. பிகாசோவிற்கு அப்போது நாற்பது வயது கடந்து விட்டிருந்தது. அவருக்குத் திருமணமாகி இருந்தது. அதனை நியாயப்படுத்த வேறு செய்தார். ‘ I was on my prime. She was on her prime’ என்று அதை விவரித்தார். இதனைப் படித்த போது எனக்கு வயது பதினேழு. நான் அப்படியே உறைந்து போனேன்.

பிகாசோ உருவாக்கிய க்யூபிசம் மகத்தான அற்புதம். அவர் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இரு பரிமாண தலத்தில் முப்பரிமாண வடிவங்களை வரைய ஓவியர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். பிகாசோ இப்படி ஒரே ஒரு பார்வையோடு ஓவியங்களை வரைய மாட்டேன் என்று மறுத்தார். ‘உங்களுடைய பார்வைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் பாயட்டும். மேலிருந்து, கீழிருந்து, உள்ளிருந்து, வெளியில் இருந்து என்று அனைத்து பார்வைகளைக் கொண்டதாகவும் இருக்கட்டும்’ என்று அவர் போட்ட வித்தே ஓவியத்துறையைப் புரட்டி போட்டது. அற்புதம். எத்தகைய கலைஞன். இப்போது சொல்லுங்கள். அவர் படைத்த எத்தனை ஓவியங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்திருந்தன. எதுவுமில்லை. அவை அவரின் பிறப்புறுப்பின் எண்ணங்களைக் கலைடாஸ்கோப் கொண்டு காட்டிய ஓவியங்கள். அவ்வளவே. கலையையும், கலைஞனையும் பிரித்துப் பாருங்கள் என்கிறார்கள். நான் பிரித்துப் பார்க்க மறுக்கிறேன்.

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் இத்தனை கலை வரலாறு உங்களை மூச்சு முட்ட வைக்கும். மன்னிக்கவும். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாதிரியார்கள் காமுகர்களாக இருப்பது, ட்ரம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது முதலியவை நகைச்சுவைக்குப் பயன்படும். முன்னொரு காலத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மோனிகா லெவின்ஸ்கி பன்ச் லைனாகப் பயன்படுத்தப்பட்டார். அவரைக் கேலி செய்ததற்குப் பதிலாக, பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கிளிண்டனை நகைச்சுவை கலைஞர்கள் மேடைகளில் கிழித்துத் தோரணம் கட்டியிருந்தால், இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி விட்டு அதைக்குறித்து அகங்காரத்தோடு அறிவித்துக் கொள்ளும் ஒரு ஆண் அமெரிக்கக் குடியரசு தலைவர் மாளிகையில் உட்கார்ந்திருக்க முடியாது.

நம்முடைய நகைச்சுவையின் இலக்காக இருக்க வேண்டும் தெரியுமா. ஒருவரின் நற்பெயர் மீது நமக்கு இருக்கும் அளவுகடந்த வெறி. அனைத்தையும் விட ஒருவரின் புகழ் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. மானுடத்தை விடவும் நற்பெயர் நமக்கு முக்கியமானதாகி விடுகிறது. இவ்வாறு வழிபாட்டுத்தன்மையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது ஒழிய வேண்டும். பிரபலங்களான பிகாசோ, கிளின்டன், ட்ரம்ப், வேய்ன்ஸ்டீன், ரோமன் போலன்ஸ்கி என்று பெண்களை, குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய ஆண்கள் விதிவிலக்குகள் அல்ல. அவர்களே பெரும்பான்மை. அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல, அவர்களே சமூகத்தின் உண்மை முகத்தைச் சொல்லும் கதைகள்.

இந்தக் கதைகளின் நீதி என்ன தெரியுமா? ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே? இந்த ஆண்கள் நம்முடைய வாழ்க்கை கதைகளைப் படிப்பவர்கள். அவர்கள் மனித நேயமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அது குறித்துத் துளி கூடக் கவலைப்படவில்லை. இந்த ஆண்கள் தங்களுடைய விலை மதிப்பில்லாத புகழோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை, இவர்கள் எத்தனை கொடூரமானவர்களாக இருந்தாலும் நாம் கவலை கொள்வதில்லை. புகழ் மீதான உங்களுடைய வெறி கெட்டு ஒழியட்டும். என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். ம்ம்ம்ம். (பெருமூச்சு விட்டு சிரிக்கிறார்) எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது இல்லையா. நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறையில் இருக்கும் சிலர், ‘இந்தப் பெண் தன்னுடைய பதற்றத்தின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விட்டாள்’ என்று நினைக்கிறார்கள். அது சரி தான். கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் கோபப்படக்கூடாது இல்லையா? தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி?’ என்று என்னை அடித்துத் துவைத்தான். நான் ரத்தம் சொட்ட சொட்ட நின்றேன். நான் அவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவமனைக்கு ஆவது போயிருக்க வேண்டும். நான் இவை எதையுமே செய்யவில்லை. ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே நிறைத்தால் அது தான் வாழ்வதற்கான எந்தத் தகுதியும் அற்ற ஒருத்தியாகத் தானே உணரும். மற்றொரு புறம், இன்னொரு மனிதன் என்னை வெறுப்பதற்கும் அனுமதி தருகிறீர்கள்.

அந்தச் சம்பவம் நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பதால் நிகழவில்லை. அது என்னுடைய பெண் அடையாளம் சார்ந்தது. நீங்கள் பெண் என்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களின் படி, நான் வழிதவறிப்போன பெண். நான் தண்டிக்கப்பட வேண்டியவள். இந்த வாழ்க்கைப்போராட்டம் உங்களால் ஏற்பட்ட பதற்றம். இதனை இனிமேலும் என்னால் சுமந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் போன்ற ‘இயல்பானவர்களாக’ இல்லாத எங்களுக்குள் இந்தப் பதற்றம் சுட்டெரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்பது தானே உங்களுடைய பார்வையாக இருக்கிறது.

இந்த அறையில் இருக்கும் ஆண்களே. உங்களுடைய சட்டையை மடித்துக் கொண்டு இந்த அநீதிக்கு எதிராகக் கிளம்புங்கள். சே, என்ன அவமானம் இது! ஒரு லெஸ்பியன் உங்களுக்கு எப்படி ஆடை அணிவது என்று அறிவுரை சொல்கிறாள். இந்த நிகழ்ச்சியின் கடைசி நகைச்சுவையாக இதுவே இருக்கட்டும்.

என் வாழ்க்கை முழுக்க நான் ஆண்களை வெறுப்பவள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் ஆண்களைச் சத்தியமாக வெறுக்கவில்லை. நான் பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று என்றைக்கும் எண்ணியதில்லை. அதிகாரம் தலைக்கேறினால் ஆண்களைப் போலவே பெண்களும் நடந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஆண்களான நீங்கள் ஒட்டுமொத்த மானுட நிலையை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்று இயங்குகிறீர்கள். அதிகாரம் ஆண்களுக்கு உரியது, மனிதகுல மேன்மை எங்களுடைய பொறுப்பு என்று நீங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுகிறீர்கள். அப்படித்தான் கதைகளைக் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். உங்களை நோக்கி எழுப்பப்படும் ஒரு விமர்சனத்தை, ஒரு எளிய நகைச்சுவையை உங்களால் நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியவில்லையே. உங்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றத்தை வன்முறை இல்லாமல் சீர்செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் சிரமேற்றுக்கொண்ட பணிக்குத் தகுதியானவர்கள் தானா நீங்கள் என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

நான் ஆண்களை வெறுக்கவில்லை. நான் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறேன். ஒரு அறையில் ஆண்களுக்கு நடுவே ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்க நேர்ந்தால் எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இப்படி நடந்து கொள்வது வேடிக்கையானது என நீங்கள் எண்ணக்கூடும். அப்படி என்றால், நீங்கள் பெண்களோடு உங்கள் வாழ்க்கை முழுக்க உரையாடி இருக்கவில்லை என்று பொருள். நான் உங்களை வெறுக்கவில்லை. என்னைப்போன்ற பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் வாழ்ந்திருந்தால் என்னாகி இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்.

நான் சிறுமியாக இருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானேன். என்னுடைய பதினேழு வயதில் ஒரு ஆண் என்னை அடித்துத் துவைத்தான். என்னுடைய இருபதுகளில் இரு ஆண்கள் என்னை வன்புணர்வு செய்தார்கள். எனக்கு நடந்தவை சரியானவையே என்று ஏன் சமூகம் கருதியது. ஏன் என்னை மட்டும் குறிவைத்து தாக்கினார்கள். நான் உங்களில் இருந்து வேறுபட்டவள் என்பதால் தானே? இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு என்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே? உங்களைப் போல இல்லாமல் வேறுபட்டவர்களாக இருப்பது அத்தனை பெரிய குற்றமா?

உங்களிடம் ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என்னை நீங்கள் பாதிக்கப்பட்டவளாகப் பார்க்க ஆரம்பித்து இருக்கலாம். நான் ஒன்றும் பாதிக்கப்பட்டவள் இல்லை. என்னுடைய கதையை உங்களிடம் சொல்கிறேன். ஏனெனில், என் கதை மதிப்புமிக்கது. நீங்கள் அனைவரும் என் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்ன அறிந்து கொண்டேன் என்பதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கவே உங்கள் முன் நிற்கிறேன். எங்களை ஆதரவற்றவர்களாக நிற்க வைத்தாலும் எங்களுடைய மனித நேயம் இறந்து விடாது. இத்தனை வலிகளுக்கு நடுவேயும் நம்பிக்கையோடு இருப்பதே மனிதநேயம் தான். இன்னொரு சக மனிதரை ஆதரவற்றவர்களாக நிற்க வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கருதிக்கொண்டு இயங்குபவர்களே மனிதநேயம் அற்றவர்கள். அவர்களே பலவீனமானவர்கள். அத்தனை அடிகளுக்குப் பிறகும், உடைந்து போகாமல் இருப்பதே உன்னதமான வலிமை.

ஒரு பெண்ணை அழிக்கிறீர்கள் என்றால் அவளுடைய கடந்த காலத்தையும் அழிக்கிறீர்கள். என்னுடைய கதையை நான் சாகவிட மாட்டேன். என்னைப்போலப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன். நான் குறை சொல்வதற்காக என் கதையைச் சொல்லவில்லை. பணம், அதிகாரம், புகழ் நாடி என் கதையை உங்கள் முன் கொட்டவில்லை. என்னை வாட்டிக்கொண்டிருக்கும் தனிமையின் வெம்மை சற்றே தணியவே என் கதையைக் கண்ணீரோடு சொல்கிறேன். உங்களோடு என்னைப் பிணைத்து கொள்ளவே என் கதையைச் சொல்கிறேன். என் கதையை நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். முரண்சுவையாக, பிகாசோ சொன்னதைப் போல, ‘நாம் வேறுபட்ட சமூகத்தை வரைய துணிவோம்.’ எல்லா வகையான பார்வைகளும் கொண்ட உலகத்தைப் படைக்க முனைவோம். வேறுபாடுகள் கொண்ட சமூகமே நம்முடைய பலம். வேற்றுமைகளே நமக்கான ஆசிரியர். வேறுபாடுகளைக் கண்டு அஞ்சுவீர்கள் என்றால் நம்மால் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது.

பிகாசோ எல்லாருடைய பார்வைகளையும் தானே படைத்துவிட முடியும் என்று நம்பியது தான் அவரிடம் இருந்த கோளாறு. அவரின் பார்வையை மட்டுமே கணக்கில் கொண்டதால் தான் நம்மால் ஒரு பதினேழு வயதின் பெண்ணின் பார்வையைக் கவனத்தில் கொள்ளவே இல்லை. ஒரு பதினேழு வயது பெண்ணிடமா உன்னுடைய பலத்தைப் பரிசோதிப்பாய். என்னைப்போன்ற வலிமை மிக்கப் பெண்ணிடம் உன் வேலையைக் காட்டிப்பார் காமுகனே. வரமாட்டாய். உடைந்து, உருக்குலைந்து போய், தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட பெண்ணை விட உலகில் வலிமை மிக்கவர் யார் உள்ளார்?  [பலத்த கரவொலி]

எதோ ஆண்களைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி நான் கேள்விகளால் துளைப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். முழுக்க முழுக்க உண்மை. நான் ஒரு வாழ்நாள் முழுக்க அனுபவித்ததை ஒரு மணிநேரம் உங்களுக்குச் சுவைக்கத் தந்தேன். அவ்வளவே. எனக்கு ஏற்பட்ட ரணங்கள் உண்மையானவை, அவை என்னை முடக்கி போட்டன. நான் மீண்டும் தழைக்க முடியாது. அதனால் தான் நான் நகைச்சுவை கலைஞராக இனிமேலும் தொடரக்கூடாது. என்னுடைய பதற்றம் மிகுந்த கதையை நகைச்சுவையால் சொல்லிவிட முடியாது. அதனைக் கோபத்தோடு தான் உரக்க சொல்ல முடியும். நான் கோபத்தோடு இருக்கிறேன். எனக்குக் கோபப்பட எல்லா உரிமையும், நியாயமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய கோபத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உரிமையில்லை. நான் அதனை நிச்சயம் செய்யமாட்டேன். கோபமும் நகைச்சுவையைப் போல அனைவரையும் இணைக்கக் கூடியது. முகந்தெரியாத மனிதர்கள் அனைவரும் ஒரே கோபத்தில் ஒன்று சேர முடியும். அது ஆனால் நல்லதில்லை.

நகைச்சுவையைப் போலக் கோபம் பதற்றத்தை தணிக்காது. கோபமே ஒரு நச்சான பதற்றம். அது வேகமாகப் பரவும் வியாதி. அதற்குக் கண்மூடித்தனமான வெறுப்பைப் பரப்புவதைத் தாண்டி எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய கருத்துரிமை பொறுப்பு மிக்க ஒன்று. நான் பாதிக்கப்பட்டவள் என்பதற்காக என் கோபத்தைப் பரப்புவது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது. வெறுப்பு என்றைக்கும் மேம்பாட்டிற்குப் பயன்படாது.

வாய் விட்டு சிரித்தால் நம்முடைய நோய்கள் விலகாது. கதைகள் நம்மைக் குணப்படுத்தும். நகைச்சுவை கசப்பான கதைகளைத் தேன் தடவி தருகிற ஒன்று. நீங்கள் நகைச்சுவையாலோ, வெறுப்பாலோ ஒன்று திரள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என் கதைக்குச் செவிமடுங்கள். என் கதையை ஒவ்வொரு சுய சிந்தனையுள்ள மனிதரும் தனிப்பட்ட முறையில் உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். என் கதை உங்களுடைய கதையைப் போன்றதில்லை. ஆனால், என் கதை உங்களுடைய கதையும் கூட. என் கதையை இனிமேலும் என்னால் சுமக்க முடியாது. என் கதையைக் கோபத்தால் நிறைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய கதையை அக்கறையோடு பார்த்துக் கொள்ள உதவுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வான்காவின் மகத்தான படைப்பான சூரிய காந்திகள் அவருடைய மனநோயால் நமக்குக் கிடைக்கவில்லை. அத்தனை துயரத்திலும், வலியிலும் அவனை நேசிக்க ஒரு உயிர் இருந்தது. அவன் தம்பியின் அன்பு இந்த நம்பிக்கையற்ற உலகத்தில் பற்றிக்கொள்ள, தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள வான்காவுக்கு உதவியது. நாம் படைக்க விரும்பும் கதையின் மையமும் அதுதான். ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ளவர்களாக உணர வேண்டும். பிணைய வேண்டும். நன்றி!

The post ஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் appeared first on ஓரினம்.

நர்த்தகி நடராஜ் –இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா”விருது பெறுநர்

$
0
0
Image: www.narthakinataraj.com

பரதநாட்டியக் கலைஞர், முனைவர் ‘திருநங்கை’ நர்த்தகி நடராஜ் அவர்கள் இந்தியாவில் “பத்மஸ்ரீ” விருது பெரும் முதல் திருநங்கை ஆனார். இதைபற்றிய செய்தி இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 25ஆம் தேதி, 2019 அன்று வெளியிடப்பட்டது. இச்செய்தி ஊடகங்களாலும், நர்த்தகி அவர்களின் ரசிகர்களாலும், சக நாட்டிய கலைஞர்களாலும் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

அவரின் பால் அடையாளத்தினை அவரது குடும்பம் ஏற்காததால் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் இவருக்கு மிகச் சிறிய வயதிலேயே ஏற்பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் ஒரு ஒப்பற்றப் பரதநாட்டிய கலைஞர் மற்றும் ஆசிரியராகி, இந்தியாவின் முதன்மையான விருதுகளில் ஒன்றை பெற்றதின் மூலம் வெற்றியின் சிகரத்தை எட்டியுள்ளார்.

நர்த்தகி அவர்களின் வெற்றிப்பாதை எளிமையானதாக இருக்கவில்லை. ஓர் பரதநாட்டியக் கலைஞராக ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதே கடினம், அதிலும் பால் மாறுதலை அந்த காலகட்டத்தில் செய்ய முயற்சித்தது மாபாரத செயல். நாட்டிய அரங்கேற்றம் தனது ஆசிரியர் திரு.நாமனூர் ஜெயராமன் தலைமையில் நடந்த பின், நர்த்தகி அவர்கள் நாட்டிய மாமேதை தஞ்சாவூர் திரு.கிட்டப்பா பிள்ளை அவர்களிடமிருந்து, 1985 இல் ஆரம்பித்து 1999 வரை கடும் பயிற்சியினை மேற்கொண்டார். இந்த பெரும் காலகட்டத்தில் “வாத்தியார்” கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் அன்பும் அடைக்கலமும் பெற்று அவருடனேயே தங்கி மிக அற்புதமான, அரிய ஆடல் உருப்படிகளை இவர் கற்றுக் கொண்டார். இதில் மிக முக்கியமானவை “தஞ்சை நால்வர்” என்று பெருமையுடன் அழைக்கப்படும் திரு.கிட்டப்பா பிள்ளையின் மூதாதையர்கள் இயற்றிய பாடல்கள். இப்பாடல்களை இன்றும் நர்த்தகி நடராஜ் அவர்கள் நடனமாடி புகழ் சேர்க்கிறார். 2000 வது ஆண்டில் சென்னை சென்றடைந்தார்.

சென்னையில் அரங்கேறும் வாய்ப்புக்கள் எண்ணற்ற தடைகளுடன் இருந்தன; ஆனாலும் கலை ஆர்வம் மற்றும் கலைக்காகவே தன் முழு வாழ்க்கையை அர்ப்பணித்தப்படியால், அமைப்பாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் நெஞ்சங்களை வென்றார். கூடிய விரைவிலேயே சென்னையின் முதன்மையான இயலிசை நாடக்க கூடங்களான “சபாக்களில்” வழக்கமான கலைஞர் ஆனார். டிசம்பர் மாதம் சென்னையில் நடக்கும் “மெட்ராஸ் மியூசிக் சீசன்” என்று சொல்லக்கூடிய மார்கழி இசை நாட்டிய நாடக விழாக்களில் பங்கேற்கக்கூடிய முக்கிய பரதநாட்டியக் கலைஞர் ஆனார்.

2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு “கலைமாமணி” விருதினை அளித்தது. இதைத் தவிர, இந்திய அரசாங்கத்திடமிருந்து 2011 ஆண்டில் “சங்கீத் நாடக் அகாடெமி” விருதையும் பெற்றுள்ளார். (ஓரினம் இவரை அப்பொழுது வாழ்த்தியது. இதைப் பற்றி படிக்க) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இவருக்கு 2016ஆம் ஆண்டில் மதிப்புறு முனைவர் பட்டம் (டாக்டர் ஆப் லெட்டர்ஸ்) வழங்கியது. நர்த்தகியும், அவரது உற்றத்தோழி மற்றும் சக நடன கலைஞருமான திருநங்கை சக்தி பாஸ்கர் அவர்களும், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள மதிப்புமிக்க அரங்கங்களில் நிகழிச்சிகளை அளித்துளள்னர்.

Narthaki and Shakthi
Image of Narthaki and Shakthi: Facebook.com

இப்பொழுது நர்த்தகி பல மாணவர்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார், முக்கியமாக திருநங்கைகள் மற்றும் மாற்றுப்பால்/மாற்றுப்பாலீர்ப்பு அடையாளங்களைக் கொண்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார். 2018 ஆம் ஆண்டில் அவரது கலைப் பயணம் பதினோராம்-வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ஒரு பாடமாக இடம் பெற்றுள்ளது.

Image cred: TamilNadu LGBTIQ

நர்த்தகி அவர்களின் நாட்டிய கச்சேரிகளில் அவர் “நாயிகா பாவம்” என்று சொல்லக்கூடிய, தன்னை தலைவியாக பாவித்துக்கொண்டு காதல் வசப்பட்டு தலைவனைப் பற்றி பாடும் பாடல்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் மனங்களை கவர்ந்திருக்கிறிது. அவரது நாட்டியத்தை அவர் சமூகத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள உபயோகப்படுத்தி, பெரும் அளவில் பாமர மக்களளுக்குக் கூட நாட்டிய ஆர்வத்தினை புகுத்தி உள்ளார். இதன் மூலம் பரதநாட்டியத்தை உலகளாவிய கலையாக்கி, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை மீறச் செய்திருக்கிறார் நர்த்தகி.

தனது பால் அடையாளம் அவரின் கலை மேல் கொண்ட தாக்கத்தைப் பற்றி நர்த்தகி அதிகம் கூறியுள்ளார். “தி ஐந்து” பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு அவர் ஒரு பேட்டியளித்ததில், “நான் அடையாளத்துக்கு ஆடினேன், பிழைப்புக்காக ஆடினேன்…இப்பொழுது நான் எனது ஆன்மாவிற்காக ஆடுகிறேன். பரதக்கலை என்னைத் தனது கருப்பையில் வைத்து ஈன்றெடுத்து நர்த்தகி நடராஜாக மறுபிறவி அளித்துள்ளது” என்று கூறினார்.

தமிழ் இலக்கியம் மேல் பேரார்வம் கொண்ட இவர், இவரது பால் அடையாளத்தைப் பற்றி மேற்கொண்ட தேடலில் அதை நாடினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மேல் அவர் கொண்ட நேசம் அவரது நாட்டிய நிகழ்ச்சிகளில் இனிதே காண முடிகிறது. தமிழ் இலக்கியத்தில் மூன்றாம் பால் அதனின் சரித்திரத்தை கூர்ந்தாராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சிறிய காணொளியை நாம் இங்கு காண்போம். இது சிவபெருமான் மேல் காதல் கொண்ட தலைவி அவரது லீலைகளை வர்ணிக்கிறாற்போல் அமைந்த ஒரு நாட்டிய உருப்படி

நர்த்தகி திருநர் ஏற்புக்காக வெகு காலமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு, “டெட் எக்ஸ் டாக்” என்று சொல்லக்கூடிய சுயவாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய ஒரு பேச்சு நிகழ்ச்சியில், நர்த்தகி மற்றும் சக்தி கல்வி கூடங்களில் சந்தித்த ஒதுக்குதல்கள் மற்றும் ஒரு ரயில் பயணத்தில் சக யாத்திரிகள் அவரை அலட்சியப்படுத்தியபோது அவர் எப்படி அதை அணுகினார் போன்ற சம்பவங்களைப் பற்றி பேசுகிறார் நர்த்தகி.

நர்த்தகியின் வாழ்க்கைப்பயணம் நிச்சயமாக பல நபர்களை ஊக்குவிக்கிறது. குறிப்பாக சமூக ஒடுக்குதல்களை உடைத்து, தடைகளை வென்று வாழ்க்கையில் தேர்ச்சி பெற உதவுகின்றது. ஓரினம் நர்த்தகி நடராஜ் அவர்கள் “பத்மஸ்ரீ ” விருது பெற்றமைக்கு புகழுரை அளிக்கிறது. மென்மேலும் பல சாதனைகளை புரிந்து பெருமை சேர்க்க அன்பார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.


Acknowledgements: Thanks to Srinivas for translating this piece from Maddy’s original, and to to Subha for editorial input.

The post நர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர் appeared first on ஓரினம்.


திருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு

$
0
0
photo from Chennai protestagainst TransBill Dec 3, 2019
Image credit: Srijith Sundaram

டிசம்பர் 3, 2019 அன்று, சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பின்வரும் அறிக்கை வெளியிடப் பட்டது.

குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்துடன் நடந்த இந்த சந்திப்பில், திருநர் மசோதாவை தற்போது இருக்கும் வரைவிலேயே ஏற்றுக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என குடியரசு தலைவருக்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வாயிலாக வேண்டுகோள் விடுக்கப் பட்டது.

செய்திக்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இங்கே கிளிக் செய்க.


திருநர் சமூக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றும் தமிழ்நாடு ரெயின்போ கூட்டணியின் உறுப்பினர்கள், எல்.ஜி.பீ.டி.கியூ + குழுக்கள், கூட்டு மற்றும் தனிநபர்களின் குழுக்கள் இணைந்து மாநிலங்களவையில் திருநர் மசோதா நிறைவேற்றப்பட்டதில் எங்கள் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் அறிக்கை பின்வருமாறு:

நவம்பர் 26, 2019 அன்று மாநிலங்களவை நிறைவேற்றிய இந்த மசோதா, இந்திய உச்சநீதிமன்றத்தின் 2014 ஆம் ஆண்டின் நல்சா தீர்ப்பிற்கும், அரசியலமைப்பின் கட்டுரைகளான பிரிவு 21 (வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை), பிரிவு 19 (1 அ) (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை) ஆகிய பிரிவுகளுக்கும் எதிராக அமைந்துள்ளது.

  1. திருநர் மசோதா 2019, பிரதானமாக, சுயநிர்ணய கொள்கையில் NALSA தீர்ப்பிற்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது.  தணிக்கைக் குழு முறை தவிர்க்கப்பட்டுள்ள போதிலும், திருநர்களின் அடையாளத்தை வழங்குவது மற்றும் விண்ணப்பத்தை மறுக்கும் அதிகாரங்கள் மாவட்ட நீதிபதி ஒப்புதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. கூடுதலாக, ஒரு  திருநர் ஆண் அல்லது பெண் என அடையாளம் காண, அறுவை சிகிச்சைக்கான ஆதாரம் தேவைப்படுகிறது. இது NALSA தீர்ப்பிற்கு முரணானது.
  2. திருநருக்கான( வயது வந்தவர்கள் உட்பட) முதன்மை பராமரிப்பாளர் இரத்த சொந்தமாக இருக்க வேண்டும் என்றும், அல்லது அதற்கு ஒரே மாற்று அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புனர்வாழ்வு மையங்கள் மட்டும் தான் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, குடும்பம் பெரும்பாலும் திருநருக்கு எதிரான வன்முறையின் பிராதான தளமாகும். மேலும் முதன்மை பராமரிப்பாளராக பிறந்த குடும்பம் தான் சரியானது என்ற வாதம் குறுகளானது. இரண்டாவதாக, திருநர்களுக்கு முறையான உரிமைகள் உள்ள மாற்று குடும்ப கட்டமைப்புகளை மசோதா முற்றிலும் புறக்கணிக்கிறது. பல நூற்றாண்டுகளாக திருநருக்கு தங்குமிடம் மற்றும் ஆதரவை வழங்கிய பாரம்பரிய ஜமாஅத் அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மற்ற எடுத்துக்காட்டுகள் நெருங்கிய கூட்டாளர்கள், நண்பர்கள் போன்றவர்களாக இருக்கலாம்.
  3. திருநருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு பற்றி மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. இது நல்சா தீர்ப்பை முற்றிலும் மீறுவதாகும்.
  4. திருநருக்கு எதிரான தாக்குதல் மற்றும் பிற மோசமான குற்றங்களுக்கான தண்டனை அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இது பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் திருநர் தாழ்ந்த குடிமக்களாக கருதுகிறது. திருநர்களுக்கு எதிரான  குற்றங்களும் மிகவும் கடுமையான தண்டனைக்குரியவை. கூடுதலாக, திருநர்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும், களங்கம் மற்றும் பாகுபாடு பற்றிய தெளிவான செயல்பாட்டு வரையறைகள் தேவை. எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்பு தடுப்புச்சட்டத்தை மையமாக கொண்டு  திருநர் மற்றும் இடையிலங்க (இன்டர்செக்ஸ்) நபர்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுப்பதற்கான ஒரு சட்டம் வழிவகுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
  5. இந்த மசோதா திருநர்  மற்றும் இடையிலங்க நபர்களின் (இன்டர்செக்ஸை) அடையாளங்களைக் குழப்புகிறது. மசோதாவின் இந்தி மொழிபெயர்ப்பு, இடையிலங்க (இன்டர்செக்ஸ்) என்று பொருள்படும் “உபயலிங்கி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இன்டர்செக்ஸ் நபர்களுக்கான உரிமைகள் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தும் அதே நேரத்தில்,  திருநர்கள் மற்றும் இடையிலங்க நபர்கள் (இன்டர்செக்ஸுடன்) ஆகியோருக்கான அடையாளங்களை முறையே வரையறுக்குமாறும்    கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலான திருநர்களுக்கு பாலியல் வளர்ச்சியில் (டி.எஸ்.டி) வேறுபாடுகள் இல்லை.
  6. ஆண் பாலினம், பெண் பாலினம் அல்லது அந்த இரு பிரிவுக்கும் வெளியே அடையாளம் காண தனிநபர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் திருநர்களின் அடையாள அட்டைகள், கேரளாவில் உள்ள நடைமுறையைப் போலவே, அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்பட வேண்டும். திருநங்கை, திருநம்பி மற்றும் மூன்றாம் பாலின நபர்களை உள்ளடக்கியதாக இந்த அடையாள அட்டைகள் இருக்க வேண்டும்.
  7. குடும்ப  வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தில் (2005) திருநங்கைகளை ‘பெண்கள்’ என்ற எல்லைக்குள் கொண்டுவர வேண்டும். இது தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அக்டோபர்  (2019) தீர்ப்பால் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.திருநங்கைளுக்கும், திருநம்பிளுக்கும் இலவச பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைகள் மற்றும் (ஊக்கிகள்) ஹார்மோன் சிகிச்சைகள் நாடு முழுவதும் கிடைக்கப்பெற வேண்டும்.

திருநர் மசோதா 2019இல் மேற்கூறிய மாற்றங்கள் இணைக்கப்படும் வரை, இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி  ஒப்புதல் வழங்கப்படக்கூடாது என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


 

The post திருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு appeared first on ஓரினம்.

‘விசித்திரமான பையனு’க்கு அப்பால் ஒற்றுமையை நோக்கி

$
0
0

by YaliniDream and Angel Queentus

image of ocean

முரண்பாடுகள்

இலங்கையின் கொழும்புநகரில் 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஒரு இளம், தன்பாலீர்ப்பு கொண்ட தமிழ்ச் சிறுவனை மையமாகக் கொண்டு ஷியாம் செல்வதுரை எழுதிய ஒரு தைரியமான, புதுமையான நாவல் ‘ஃபன்னி பாய்’ (விசித்திரமான பையன்). இடையிலிங்க, திருநர் மற்றும் குயர் தமிழ் பேசும் சமூகங்களின் வாழ்ந்த அனுபவங்களைப் பற்றி பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒரு நாவல் பெரிய திரைக்குச் செல்வதை வைத்துக்கொண்டு, எங்கள் சமூகங்களைச் சுற்றியுள்ள தவறான கதைகளை உடைக்க மீண்டும் ஒரு முறை நாங்கள் செயலூக்கம் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஃபன்னி பாய் நாவலின் சக்திவாய்ந்த கதைசொல்லல் முறை உலகளாவிய பார்வையாளர்களுக்கு மிகவும் மௌனமாக்கப்பட்ட தமிழ் பேசும் அனுபவங்களில் ஒன்றை எடுத்துச் செல்கிறது. பண்டைய குயர், திருநர் மற்றும் இடையிலிங்கத் தமிழ், முஸ்லீம் வரலாறுகள் இருந்தபோதிலும், காலனித்துவம், சாதிவாதம், மத ஆணாதிக்கங்கள், சர்வாதிகாரவாதம், பொருளாதார சுரண்டல், பேரழிவு முதலாளித்துவம் மற்றும் போர் ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட துன்புறுத்தல் மற்றும் தவறான தகவல்களால் நமது சமூகங்களுக்கான இடம் பயங்கரமாகக் குறுகிவிட்டது

1994 ஆம் ஆண்டில் ஃபன்னி பாய் வெளியிடப்பட்ட நேரத்தில், உண்மையான எல்ஜிபிடிகுஐ+ தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் இல்லை என்று ஒரு தவறான இருமைக்கட்டமைப்பு வெளிவந்தது. நீங்கள் இந்த வழியில் “வித்தியாசமான” அல்லது “குயர்” அல்லது “விநோதமானவர்” என்றால், நீங்கள் மேற்கத்தைய சமூக வாழ்க்கைமுறைகளால் கவரப்பட்டு மாறிவிட்டீர்கள் என்ற கற்பிதம் உருவாகியிருந்தது.

 

FunnyBoy and Deepa Mehta
இந்தவகை எடுத்துரைப்பானது போரின் வன்முறையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இன்டர்செக்ஸ், டிரான்ஸ் மற்றும் குயர் தமிழ் பேசும் சமூகங்களிளுக்கு மேலும் வேதைனையை உண்டு பண்ணியது. தணிக்கை, துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களின் கொலைகளை இந்த இருமை எதிவு நியாயப்படுத்தியது. மேலும் எம் சமூகங்களுக்குள் தனிமை, சுய வெறுப்பு, அவமானம், துருவப்படுத்தல் மற்றும் துண்டு துண்டாதல் பற்றி எரிவதற்கு இது வழிவகுத்தது. எங்கள் சமூகங்களுக்குள் மிகவும் துன்புறுத்தப்பட்டவர்களைப் பாதிக்கும் சாதி, மத மற்றும் வர்க்க அம்சங்கள் பற்றிய நுண்ணறிவு ஃபன்னி பாய் நாவலில் இல்லாவிட்டாலும் கூட, ஷியாம் செல்வதுரை இந்த தவறான இருமைஎதிர்வைத் தகர்த்து, மிகவும் தேவைப்பட்ட ஒரு வெளியைத் திறந்துவைத்தார்.

சமீபத்தில், இந்தக் கதை தீபா மேத்தாவின் தழுவல் மூலம் நாவல் வடிவத்தில் இருந்து திரைப்பட வடிவத்துக்குத் தாவிச்சென்றிருக்கிறது. திரைப்படம் தமிழர் சமூகங்களின் மிகவும் வேதனைக்குரிய நெருக்கமான அம்சங்களைக் குறுக்கிட்டுச் செல்வதன் காரணத்தால், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட புகழாரங்களும் விமர்சனங்களும் அதையொட்டி எழுந்திருப்பதைக் காண்கிறோம். தமிழ்பேசும் குயர், திருநர், இடையிலிங்க சமூகங்களுக்கிடையே வருத்தம்தரும்வகையில் எதிரொலிக்கும் இவ்விமர்சனத்தின் மையச்சரடு பின்வரும் மூன்று விடயங்களை மையப்படுத்துகிறது: மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடிகர் பிரதிநிதித்துவம், தமிழ் மொழி மோசமான முறையில் உபயோகிக்கப்பட்டிருப்பது, மேலும் வரலாற்றைத் திரிபுபடுத்திக் காண்பித்தமை.
இவை ஆராய்வதற்கும் விவாதிப்பதற்கும் தகுந்த சரியான கரிசனங்கள் என்ற போதிலும், தீவில் உள்ள எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களிடம் கூட்டு ஒன்றிணைவையும் பொறுப்புணர்வையும் நிரூபிக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் பலரும் தவறியிருப்பதை எங்கள் சமூகங்கள் கண்ணுறுகின்றன. தோல்வியுற்ற இந்தக் கூட்டு ஒருங்கிணைவின் விளைவுகளாக துருவப்படல், ஓரங்கட்டப்பட்ட மக்களை மேலும் மௌனமாக்குவது, மற்றும் சமீபத்திய சூறாவளியால் அதிகரித்திருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்வோரின் உள மற்றும் உடல் பாதுகாப்புகளை உறுதிசெய்யத் தவறும் நிலை ஆகியவற்றைச் சொல்லமுடியும். இந்த சூழ்நிலைகள் பயங்கரமாகத் தீவிரமடையும் திறனைக்கொண்டுள்ளன. எங்களுடைய தமிழ்ச் சமூகங்களுக்குள் கலைகள், நலம் பெறுதல், கூட்டு ஒன்றிணைவு மற்றும் விடுதலை ஆகியவற்றில் எவ்வளவு அக்கறை மற்றும் கவனம் தேவை என்பதை இந்த கவலைக்கிடமான சூழலில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வித்தியாசமான தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொள்ளும் தீவிரமான நிலவரங்கள் சர்வாதிகார, பாசிச நிலைமைகளை எதிர்கொள்ளுவோருடனான கூட்டு ஒருங்கிணைவுக்கான பல நுண்ணறிவுகளை நல்க வல்லவை. ஆனால், தொடக்கம் கருதி சில ஆலோசனைகளை இந்த விவகாரத்தில் தம்மை இணைத்துக்கொள்வதைத் தேர்வாய்க்கொள்ளும் பால்மாறா எதிர்பாலீர்ப்புள்ள தமிழர்களுக்குச் (cis straight Tamils) சொல்ல விழைகிறோம். எங்கள் மீதான துஷ்பிரயோகங்கள், தனிமைப்படுத்துதல், கொலைகள், நோய்கள், மற்றும் தற்கொலைகளுடன் உடந்தையாக நிற்க விரும்பாவிட்டால்:

  • எல்ஜிபிடிகுஐ+ தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அன்பு, கவனிப்பு மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றை வெளிப்படுத்துங்கள்
  • இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நாம் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமைகளை மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை நிரூபியுங்கள்.
  • திரைப்படத்திற்கான உங்கள் எதிர்வினையை — அது புகழ்ச்சியாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் சரி — எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு, மேன்மை, மற்றும் விடுதலைக்கான அபிலாஷைகளை அங்கீகரித்தே முன்வையுங்கள். குறிப்பாக போருக்குப் பின்னராக, பொருளாரதாரச் சுரண்டல், அனர்த்தங்கள், வன்முறையென பல்வேறு இடர்களுக்குள்ளும் மேன்மை நோக்கிப் போராடும் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை மனம் கொள்ள வேண்டும்.

நிலவரங்கள்

திருநர், குயர் மற்றும் இடையிலிங்க மக்கள் பொதுவெளியில் வெளிப்படையாக இருப்பதென்பது, அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மிகவும் கடினமான விடயம். தாக்குதல், துன்புறுத்தல், அவதூறு என்பவற்றுக்கு மேலாக எம் சமூகங்கள் வீட்டுவசதி, கல்வி, கூட்டு வழிபாடு மற்றும் மருத்துவ பராமரிப்பு பெற்றுக்கொள்வதில் தடைகளை அனுபவிக்கின்றனர். பெரும்பாலான எல்ஜிபிடிகுஐ+ மக்கள் ஒளிவுமறைவாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் தமது கதைகளைச் சேர்க்கவும், ஒருங்கிணைக்கவும், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாத இருட்டடிப்புக்குள் அவர்களைத் தள்ளியிருக்கிறது.
பல தசாப்தங்களாக போர், அனர்த்தங்கள், சர்வாதிகாரவாதம், மத ஆணாதிக்கம் மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றால் குறுக்கப்பட்டிருந்த இந்த வெளி, “தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் ≠ எல்ஜிபிடிகுஐ+” என்ற சமன்பாட்டால் மேலும் இறுகிச் சுருங்கிவிடுகிறது. போர்க்காலப்பகுதியில் எல்ஜிபிடிகுஐ+ மக்கள் போர்க்குற்றங்கள், இராணுவமயமாக்கல், பொலிஸ் வன்முறை மற்றும் இலங்கை அரசால் இலக்குவைக்கப்படல் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்தது மட்டுமல்லாமல், தமிழ்ப் போராளிகள் மற்றும் அவர்தம் துணை இராணுவங்களின் தந்தைமையவாத கட்டுக்காவல் மற்றும் துன்புறுத்தலையும் சேர்த்தே எதிர்கொண்டனர்.
இந்தக் காலப்பகுதியில், மற்றொரு துருவமுனைப்பு — மற்றொரு தவறான இருமைக்கட்டமைப்பு — உருவாகிற்று: ஒன்றில் நீங்கள் உங்கள் வித்தியாசத்தை (ங்களை) அமைதிப்படுத்தித் தமிழ் தேசியவாதத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து உங்கள் விசுவாசத்தை பெருக்கிக் கொண்டீர்கள், அல்லது துரோகியாக அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டீர்கள். உண்மையில் பார்க்கப்போனால் யதார்த்தம் இதைவிட மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது. வித்தியாசமான தமிழ் பேசும் மக்கள் தமது இருப்பை அழித்தொழிக்க முனையும் பல்வேறு வன்முறைச் சக்திகளை பல்வேறு சிக்கலான வழிகளில் எதிர்கொண்டாக வேண்டியிருந்தது.
போர், கடத்தல், சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கீழ் சமாளித்தல், உயிர்பிழைத்தல் மற்றும் எதிர்ப்பு உத்திகள் ஆகியவற்றின் பன்முகத்தன்மை வேரூன்றத் தொடங்கின பன்முக எதிர்ப்பின் புத்திசாலித்தனமான, இரகசிய வேலைக்கு தவறான தகவல்களை எதிர்கொள்ளும் திறன், பரஸ்பர உதவி, உடல்நலம்/ஆரோக்கியத்தை வளர்ப்பது, துருவமுனைப்புகளைத் தணித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்குதல், வேறுபாடுகளைக் கடந்த இரகசிய கூட்டு ஒருங்கிணைவு வலையமைப்புகளை உருவாக்கிப் பராமரித்தல் என்பவற்றில் திறன்கள் தேவைப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கில் எல்ஜிபிடிகுஐ+ தமிழர்களின் உயிர்வாழ்வையும் போராட்டத்தையும் ஆதரிக்கவேண்டும் என விழையும் புலம்பெயர்ந்த அல்லது தென்னிலங்கையின் சில பிரதேசங்களைச் சேர்ந்தோரைப் பொறுத்தவரை கூட்டு ஒருங்கிணைவு (solidarity)என்பது மிகவும் துல்லியமாக இருக்கவேண்டும். இந்த சூழல்களில் ஒரு சிறிய தவறு கூட உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களுக்கான அன்பு, பாதுகாப்பு, மேன்மை மற்றும் விடுதலையை மையமாகக் கொண்ட வகையில் ஃபன்னி பாயைச் சுற்றியுள்ள எங்கள் உரையாடல்களை தொடர்ந்து ஆழப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கூட்டு ஒருங்கிணைவு தொடர்பான பின்வரும் உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். இவ்வழி செயற்படும் போது, அனைத்து தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை மட்டுமன்றி, ஆப்ரோ-சிலோனீஸ், வன்னியால எத்தோ மற்றும் பிற துன்புறுத்தப்பட்ட, சிறுபான்மைப்படுத்தப்பட்ட எல்லா மக்களையும் விடுதலையை நோக்கி நகர்த்த முடியும், ஒற்றுமையுடன் வேரூன்றிய சூழலை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.

வித்தியாசமான மக்களே, நாம் உங்களை நேசிக்கிறோம். உங்களுடைய தைரியம், மீளெளுகை, திறமை, மற்றும் மந்திரத்தன்மைக்கு நன்றி. அதிசிறப்பான விடுதலை எதிர்காலங்களை நோக்கி பண்டைய மதிநுட்பங்களைக் கடத்தும் நமது புனிதமான பாத்திரங்களை மீண்டும் பெறுவோம்.
வன்முறை, ஒடுக்குமுறை, துருவப்படுத்தல் மற்றும் சர்வாதிகாரத்துடன் போட்டியிடும் சமூகங்களுடன் கூட்டு ஒருங்கிணவு நோக்கிய உதவிக்குறிப்புகள் துல்லியம் மற்றும் தொடர்ச்சியைப் பயிற்சி செய்தல்: ஒரு சம்பவம், உடனடி ஆபத்து அல்லது அவசரநிலை இருக்கும்போது முன்முயற்சி எடுக்க வேண்டும்: “விஷயங்கள் தீவிரமானவை / கடினமானவை / ஆபத்தானவை என்று கேள்விப்பட்டேன், நாங்கள் ஆதரிக்கக் கிடைக்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும்? நாங்கள் இன்ன இன்ன விதங்களில் உதவமுடியும். ” நீங்கள் எதை வழங்க முடியும் என்பதில் நடைமுறைச் சாத்தியத்தை கவனம் கொள்ளுங்கள்: மக்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும்போது, தவறான வாக்குறுதிகள் ஆபத்தானவை. மக்கள் வன்முறையிலிருந்து தப்பிப்பிழைக்கும்போது, போலி வாக்குறுதிகள் அவர்களை அவதியுறச் செய்யும், துண்டு துண்டாக்கி நம்பிக்கையை ஒழிக்கும். உங்கள் வாக்குறுதிகள் குறித்துத் துல்லியமாக இருங்கள்: உங்களுடைய தரப்பு எதை நியாயமுறையில் வழங்கமுடியும் என்பதை அறிந்து வைத்திருங்கள். “இவை எனது திறன்கள். இவற்றை என்னால் இலகுடன் வழங்க முடியும். ஆனால் வேறு சிலவற்றை செய்வது எனக்குக் கடினமாக இருக்கும், ஆனால் முயன்று பார்க்கலாம். இதுதான் என் அனுபத்தின் எல்லை. இங்கே நான் இன்னும் வளர வேண்டி இருக்கிறது. இவையெல்லாம் என் குறைபாடுகள்.

கவனிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை உருவாக்குதல்: நாம் சர்வாதிகார ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்புக்குக் கீழ் அடக்கப்பட்டிருக்கும் நிலையில், சுய பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பேற்றல் நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஏற்படுவது கடினமாக இருக்கலாம். கவனிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதென்பது மேல் / கீழ் செயல்பாட்டு முறைகளில் தங்கியிருக்காத ஒரு பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு குழுவுடன் அநாமதேயமாக பணிபுரிந்தாலும், கவனிப்பு, தீவிர ஒப்புதல் மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கலாம். அர்ப்பணிப்பைச் செய்ய முடியாத ஒரு நிலையில், அல்லது தவறிழைத்த ஒரு நிலையில் நேர்மையுடன் நபர்கள் இருக்க முடிகிற ஒரு சூழலானது நீங்கள் ஒருங்கிணைவுடன் இருக்கிற எல்லொருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய இன்றியமையாதது.

திறன்கள் / தகவல்களைப் பகிர்தல், பரிமாற்றத்தை எளிதாக்குதல் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் முடிவெடுப்பதை ஆதரித்தல்: சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அமைப்புரீதியாக விலக்கி வைக்கப்பட்டுள்ள திறன்கள், தகவல்கள் மற்றும் “நிபுணத்துவம்” ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த அணுகலை ஜனநாயகமயமாக்கும் பொறுப்பு அணுகல்வாய்ப்பு மற்றும் சலுகை உள்ளவர்களுக்கு உண்டு. பட்டேர்னலிஸ (paternalism) நிலைப்பிரகாரம், “நிபுணத்துவம்” உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் அணுகல்வாய்ப்புக் கொண்ட நபர்கள் ஒடுக்கப்பட்ட நபர்கள் சார்பில் பேசுவதாகச் சொல்லி முடிவுகளையும் எடுப்பதைக் காணலாம். கூட்டு ஒருங்கிணைவு என்பது இந்த மேற்சொன்ன இயங்குதளத்தை தலைகீழாக்குவதை வேண்டிநிற்பது. ஒடுக்கும் சக்திகளால் ஆகக்கொடூரமாகப் பாதிக்கப்பட்டோர் தம்மைக்குறித்து தகவலறிந்த முடிபுகளை எடுப்பதற்கு நம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். அத்தோடு மட்டுமன்றி இதர ஒடுக்கப்பட்ட சமூகங்களுடன் பரிமாறல்களை ஏற்படுத்தித் தருவதன் மூலம் கூட்டிணவுகள், உத்திகள் மற்றும் தாக்கத்தை வலுப்படுத்தமுடியும். துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் அபிலாஷைகளைப் பொறுத்து அவர்கள் எவ்வாறு தம் நோக்குகள் மற்றும் இலக்குகள் நோக்கி நகரமுடியும் என்பதற்கு அணுகல் வசதிகள் கிடைக்கப்பெற்ற நபர்கள் சிபாரிசுகளையோ அல்லது தெரிவுகளையோ வழங்குவதன் மூலம் உதவமுடியும். ஆனால், இறுதியாக முடிவு எடுக்கும் வலு அந்தச் சமூகத்தின் கரங்களிலேயே இருக்க வேண்டும்.
வேறுபாடுகளை மீறிய ஆதரவு, பரஸ்பர புரிந்துணர்வு, மேலும் ஒருங்கிணைவை வளர்த்தல்: எல்ஜிபிடிகுஐ+ தமிழர்களைப் பொறுத்தவரை, கடூரமான நிலைமைகள் மற்றும் தவறான தகவல்கள் பன்மைத்துவத்தை எவ்வாறு தடுக்கும் என்பதையும், அதற்கு பதிலாக வேறுபாடுகளைத் தூண்டி விரோதம் மற்றும் துருவமுனைப்பை வளர்ப்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். பன்மைத்துவம் என்பது விடுதலைச் செயற்பாட்டில் அவசியமான, அழகான பகுதி. பன்மைத்துவ தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தீர்வுகளை உருவாக்குவது ஒரு நியாயமான மற்றும் சமமான சமுதாயத்தை நோக்கிய பாதையாகும். பெரும்பாலும், சலுகை பெற்ற குழுக்கள் தாம் “சிறந்தவர்கள்” என்று கருதுபவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோராய் தேர்ந்தெடுப்பதன் மூலம் பெயரளவிலான உட்சேர்ப்பு பாசாங்கில் (tokenization) பங்கேற்பார்கள். இந்த பெயரளவிலான-உட்சேர்ப்பு சில அதிகாரக் கட்டமைப்புகளை உருவாக்கி மேலும் மேலும் சிதைவுறுதலையும் நம்பிக்கையீனத்தையும் சமூகங்களிடையே வளர்த்துச் செல்லும். வன்முறையால் பாதிக்கப்பட சமூகங்களுக்கு நடைமுறையில் தேவைப்படுவதென்பது தொடர்புறவும், நலம் பெறவும், வேறுபட்ட அனுபவங்கள் நோக்குநிலைகளை மீறி ஒன்றுபடவுமான ஆதரவு தான்.

மீண்டோரை மையமாகக் கொண்ட ஒருங்கிணைத்தல் ஏற்பாடுகள்:தீங்கு குறித்த பகுப்பாய்வொன்றை நடத்துங்கள். தீங்கு மற்றும் வன்முறைகளால் அதிகம் பாதிப்புற்றோரின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். ஒரு நபர் தனக்கு தீங்கு நேர்ந்ததெனப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​கவனத்துடனும் புரிதலுடனும் செவிமடுக்க வேண்டும். தீங்கிலிருந்து மீண்டோர் பாதிகாப்பான சூழல்களை அணுகவதற்கு வழிவகை செய்வதே முதன்மைச் செயற்பாடாக இருக்கவேண்டும். ஒரு நபருக்கு தீங்கு நேரும் சூழ்நிலையை விட்டு வெளியேற முடியாவிட்டால், அச்சந்தர்ப்பத்தில் ஆதரவு என்பது பாதுகாப்பாகத் தீங்கைச் சுழியோடிக் கடப்பது பற்றிய ஆலோசனையாக இருக்க முடியும். ஒரு நபர் தீங்கு விளைவிக்கும் நிலைமைகளை விட்டு தப்பி வெளியேற முயற்சிக்கிறார் என்றால், அவர் தப்பிக்க உதவுவது மற்றும் பாதுகாப்பான தஞ்ச விடுதிகளைக் கண்டுபிடிப்பது போன்றவை கூட்டு ஒருங்கிணைவாகும். தீங்கு நேரும் நிலவரங்களில், எமது இலக்குகள் தடுப்பு, இடையீடு மற்றும் எதிர்கொள்ளல். சம்மத உடன்பாட்டையும் சுய நிர்ணயத்தையும் ஆதரித்தல் என்பது தீங்கு நேரும் சூழல்களில் மேலும் முக்கியமான ஒன்று. பாதுகாப்பைத் தேடும் நபர்கள் பாதுகாப்பு வசதிகள் உள்ளோரிடம் தங்கியிருக்க நேர்கையில் அதிகார நிலைமைகள் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது.
பொருத்தமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துதல்: களத்திலிருந்து வரும் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியே கொண்டு செல்வது கூட்டு ஒருங்கிணைவில் மிகவும் உபயோகமான ஒரு உத்திதான், ஆனால் சில முன்னெடுப்புகள் இரகசியமாக இருக்கவேண்டியதும் அவசியமாகும். சில நேரங்களில், தீங்கற்றவர் என்ற அபிப்பிராயம் நன்மைபயக்கக் கூடிய ஒன்றாக ஒருக்கலாம். நீங்கள் கூட்டு ஒருங்கிணைவில் உள்ள சமூகத்தின் அன்றாட வாழ்வியல் யதார்த்தத்தில் இருந்து ஒருங்கிணைவு உத்திகளையும் தந்திரோபாயங்களையும் வடிவமையுங்கள். கள மூலோபாயம் அற்ற ஊடக வெளிச்சம் சில நேரங்களில் இலக்குவைக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பற்ற ஆபத்து நிலவரத்துக்குள் தள்ளிவிடக்கூடும்.

வலிந்த ஒத்திசைவினூடு துணைபோதலை மறுத்தல்: தமிழ்பேசும் எல்ஜிபிடிகுஐ+ மக்களைப்போலவே, பல வேறு சமூகங்களும் தங்களுடைய ஒருங்கிணைப்பு வேலைகளை இரகசியமாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளன. குரலெழுப்பும் சக்தியுள்ள, பரந்த வெளியில் செயற்படும் வாய்ப்புள்ள சலுகை நிறைந்த சமூகங்கள் இரகசியமாகச் செயற்படும் நிபந்தனையின் கீழிருப்போரின் செயற்பாடுகளை வலிந்த ஒத்திசைவின் மூலம் தமதாக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காக மறைந்தே இயங்கவேண்டியிருக்கும் சமூகங்களுடன் கூட்டு ஒருங்கிணைவில் வேலை செய்யும்போது, இந்த வலிந்த ஒத்திசவை பாதுகாப்பை விட்டுக்கொடுக்காமல் மறுதலிக்க வேண்டிய தேவை உருவாகிறது. ஒரு சமூகத்தின் சார்பில் அவர்களுக்காகப் பேசுவதற்கும், அல்லது அவர்களுடைய விருப்பங்கள், ஆய்வுகள், நுன்ணறிவுகளை வெளிக்கொணர்வதற்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் உண்டு.

அதிகாரத்தையும் கூட்டுழைப்பையும் பரிசீலித்தல்: கூட்டு உழைப்பென்பது திறன்கள், நுண்ணறிவுகள், ஏலுமைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தாக்கமிகு இடையீட்டை நிகழ்த்துவதற்கான ஒரு சந்த்தர்ப்பத்தை வழங்குகிறது. என்றபோதிலும், வழக்கத்திலிருக்கிற ஒரு பொதுவான சுரண்டல் நடைமுறை குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். சலுகை மிகுந்த ஆதிக்க சமூகங்கள் தாம் கொண்டுநடத்தும் முன்னெடுப்புகள் மற்றும் இடையீடுகளுக்குள், ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பைச் “செருகிவிட்டு” “ஆதரவளித்து” “பெரிதாக்குவதன்” மூலம் ஒருவித செல்வாக்கைத் தேடிக்கொள்ள முனைவர். இந்த முனைப்பின் கீழ், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இருப்பானது ஆதிக்க சமூகங்களின் செயல்களை நியாயப்படுத்துவற்கு துணைபோகும் நிலை ஏற்படுகிறது. இந்தவகையாக துணைபோகும் ஒத்திசைவை நல்க வேண்டிய அழுத்தத்தை உணரும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமது அருமந்த நேரத்தையும் சக்தியையும் தமது தேவைகளில் செலவிடுவதைத் தவிர்த்து வசதி வாய்ப்புள்ள ஆதிக்க சமூகங்களுக்காக விரயமாக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுகின்றனர். கூட்டு ஒருங்கிணைவு என்பது இந்தமாதிரியான அதிகாரப் பரிமாணங்கள் குறித்த உணர்திறனையும், அந்த சலுகை அதிகாரங்கள் தாக்கமுற்ற சமூகங்களின் மேம்பாட்டை நோக்கி எவ்வாறெல்லாம் பிரயோகிக்கப்பட முடியும் என்ற தொடர்ந்த பரிசீலனையையும் கோரிநிற்பது.


About the Authors:

The authors Angel Queentus (L) and YaliniDream (R) are with Maynmai,  a Tamil-led, multi-ethnic, multi-racial formation responding to attacks on asylum.

Autho rpixஏஞ்சல் குயின்ரஸ் வடக்கில் திருநர்களால் முன்னெடுத்து நடாத்தப்படும் சமூக அமைப்பான யாழ்ப்பாண திருநர் வலையமைப்பின் (JTN) ஸ்தாபக இயக்குநராவார். APTN (பாங்கொக்) அமைப்பின் 2020 ஆதரவு பயிலுநர் குழு அங்கத்தவராக, SOGIE பால்நிலைசார் மருத்துவ வசதிவாய்ப்புக்கான ஆதரவுச் செயற்பாட்டு நெறிமுறைகளை வளர்த்தெடுக்கும் பணியில் சமீபகாலமாக வேலைசெய்து வருகிறார். கடந்த மர்ர்ச் 2020இல் சங்கத் பெண்ணிய திறன் வளர்ப்பு பட்டறையில் பங்கேற்றிருந்தார். பல்வேறு ஊடக எழுத்துக்கள், தொலைக்காட்சி நேர்காணல்களை ஏஞ்சல் வழங்கியிருக்கிறார். கடந்தகாலத்தில் ஈக்வல் க்ரவுன்ட் (கொழும்பு) மற்றும் சாவிய அபிவிருத்தி நிறுவனம் (காலி) ஆகியவற்றில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழினி ட்ரீம் சுற்றுப்பயணக் கலை மரபில் வருகிற ஒரு நிகழ்த்துகலைக் கலைஞர், அமைப்பாளர், ஸோமாட்டிக்ஸ் பயிற்றுனர், மற்றும் ஆலோசகர். வன்முறையால் பாதிப்புறும் சமூகங்கள் நலமடையவும், அமைப்பாகவும், மேன்மைபெறவும் வேண்டி கலை உத்திகளைப் பாவிப்பதில் இருபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர். கவிதை, அரங்கு, பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றின் தனித்த கலவையூடாக ஆன்மாவை அழைத்து அதன்வழி நடைமுறையை மாற்றியமைக்க முயல்பவர். மண், மனம், ஆன்மா மற்றும் கனவின் நிலங்களில் நீதி மூலமாக அமைதி நோக்கிய தேடலுக்கு இது வழிவகுக்கிறது. விடுதலை எதிர்காலம் நோக்கிய செயன்முறைகளுக்கு இடமளிக்கும் பண்பாட்டு வேலையின் நிறைவான மரபில் இருந்து யாழினி தன் உந்துதலைப் பெற்றுக்கொள்கிறார். ப்ரூக்ளின் ட்ரீம்வுல்ஃப் என்பதில் ஜென்டோக் லோன்வுல்ஃப் உடன் இணைந்த ஓரங்கமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன் யாழினி விஷன் சேஞ் வின் அமைப்பில் ஆலோசகராகவும், எம்-ஸ்டூடியோ.ஒர்க் இன் இணை ஸ்தாபகராகவும், மேன்மை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்குகிறார்.

Acknowledgements:

This piece ioriginally appeared on Dec 16, 2020, in the Medium [see here] and has been republished on Orinam with the consent of the authors.

The post ‘விசித்திரமான பையனு’க்கு அப்பால் ஒற்றுமையை நோக்கி appeared first on ஓரினம்.

திருனர்* தினம் 2015 –வாழ்த்துக்கள்

$
0
0

உச்ச நீதி மன்ற பாலின சிறுபான்மையினருக்கான (திருநங்கை, திருநம்பி, கோத்தி, இஜரா, ஜோகம்மா, சிவசக்தி, பாலினம் மாற்றிக்கொண்டோர், கின்னர் இன்னும் சில) ஆனை மற்றும் திருனர் தின வாழ்த்துக்கள்

15 ஏப்ரல் 2014 அன்று இந்தியாவில் இதுவரையிலும் வெளிபடையாக தெறியாத சில பாலின அரசியலை முன்னிறுத்தும் விதமாக உயர்நீதி மன்றம் முக்கிய ஆனை ஒன்றை பிறப்பித்தது. இந்தியாவில் Hijra என்று அழைக்கப்படும் திருநங்கைகள் மற்றும் FtoM என்று அழைக்கப்படும் திருநம்பிகள் இவர்களுக்கு ஆண்/பெண் தவிற்த்து மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து பிற பிற்ப்படுத்தோருடன் சேர்த்து அரசியல் அமைப்பில் இருக்கின்ற அனைத்து அடிபடை உரிமைகளையும் கிடைக்க மத்திய மாநில அரசுகளும் விரைவில் நடவெடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆனை பிறபித்தது. வரும் 15 ஏப்ரல் 2015 அன்று ஒருவருடம் நிறைவு பெறும் நிலையில் நல்ல தீர்ப்புக்கு நன்றி சொல்ல நாம் விழா எடுத்து கொண்டாட உள்ளோம். இந்த விழா திருநங்கை திருநம்பி விழாவாக ஜென்டர் மைனாரிடிஸ்க்கு கொடுக்கபட்ட அங்கீகாரமாக அமைந்துள்ளது. நாம் இனி உச்சநீதி மன்றத்தின் ஆனைபடி என்ன நடந்துள்ளது இனி என்ன நடக்கவேண்டும் என்பதை இந்நாளில் நம் கோரிக்கையாக நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை முன்வைத்து எடுத்துச்செல்ல போராளிகளை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உச்சநீதி மன்ற ஆனையில் உள்ள 130 பக்கங்களில் எது சரி, எது சரி இல்லை என்பதையும் பார்கவேண்டும். இந்த விசையத்தில் நம் தமிழக அரசின் செயல்பாடுகள் என்ன என்று தெறிந்து கொள்ளவும் இனி வரும் வருடங்களில் அடிபடை உரிமைகளை பெற்று கல்வி வேலைவாய்ப்பு என எல்லா துறைகளிலும் நாம் உயர்ந்து நின்று சாதித்து காட்டவேண்டும். நாம் யாருக்கும் தலைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதே போல் உச்சநீதி மன்றம் மற்றொறு ஆனையான IPC 377 திருநங்கையருக்கும் எதிராக உள்ளது அதையும் திருத்தம் செய்ய பாடுபடவேண்டும். வரும் காலங்கள் நமக்கு வசந்தகாலங்களாக இருக்கவேண்டும் என்று வரும் திருனர் தினம்மும், பாலின சிறுபான்மையினர் தீர்ப்புதினமும் அமைய எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றியுடன் தெறிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்

ரேவதி

திருனர் – தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். உதாரணம் : தான் பெண் என்று மன அளவில் நம்பும் ஆண்கள். திருனர்கள் பால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வழிமுறைகளை செய்ய விரும்புவர்களாக இருக்கலாம் அல்லது விரும்பாதவர்களாக இருக்கலாம். திருனர்களின் பால் ஈர்ப்பும் எல்லோரையும் போல பன்மைபட்டது.

The post திருனர்* தினம் 2015 – வாழ்த்துக்கள் appeared first on ஓரினம்.

திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை

$
0
0

Click here for English

மே 3, 2023

பெறுநர்: தமிழ்நாடு அரசு

பொருள்: தமிழ்நாடு  மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு (LGBTQIA+) சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான “திருமண சம உரிமை” அறிக்கை

இந்திய உச்ச நீதிமன்றத்தில் திருமண சம உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் தருணத்தில், கடந்த ஏப்ரல் 23. 2023 அன்று சென்னையில் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் LGBTQIA+ சமூக மக்களுக்காகச் செயல்படும் குழுக்களான கட்டியக்காரி, Queerbatore,  நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், திருநர் உணவுக் கூடம் (சென்னை), தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், தனிநபர் சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பின் அங்கமாவர். 2009-ஆம் ஆண்டு சென்னை வானவில் கூட்டமைப்பு என ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைசாரா அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட எடுக்கப்பட்ட முடிவுகளை அரசின் பார்வைக்குச் சமர்பிக்கிறோம். திருமண சம உரிமை வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்யும்போது இதில் உள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

  • அறிமுகம் 
  • திருமணமும் அதன் பலன்களும் – LGBTQIA+ சமூக மக்கள் தங்கள் திருமணத்திற்குச் சமூகப் பாதுகாப்பு கோருவது ஏன்? 
  • LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது இருக்கும் தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா? 
  • சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் 
  • தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை

அறிமுகம்: 

1.1 தமிழ்நாடு அரசு திருநர் மக்களைச் சட்டரீதியாக அங்கீகரித்ததுடன் அவர்களுக்கான நலவாரியத்தையும் 2008-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. நால்சா (NALS) vs ஒன்றிய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், அருண் குமார் மற்றும் பிறர்  vs பதிவுத்துறை தலைவர் மற்றும் பிறர் வழக்கில் திருநங்கைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எஸ். சுஷ்மா  vs காவல்துறை ஆணையர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் LGBTQIA+ சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கியது. 

1.2 கொள்கை மாற்றம், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு வழிகாட்டுதல் போன்றவற்றின் மூலம் LGBTQIA+ சமூக மக்களை அங்கீகரித்து, ஆதரித்து வரும் மாநிலம் என்ற முறையில் மற்றும் சுய மரியாதை/சீர்த்திருத்தத் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 1968-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த மாநிலம் என்ற முறையில்,  திருமண சம உரிமை விவகாரத்திலும், பாலின பாகுபாடின்றி (ஆண், பெண், திருநர்) LGBTQIA+ சமூக மக்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கும் விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு LGBTQIA+ மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

1.3 இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் (இனி முதல் “திருமண சம உரிமை மனுக்கள்” எனக் குறிப்பிடப்படும்) மீதான விசாரணையின்போது, சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act) மற்றும் மத ரீதியான தனிப்பட்டச் சட்டங்களின் (Religious Personal Laws) கீழ் LGBTQIA+ மக்கள் திருமணம் செய்து கொள்வதற்குத் தமிழ்நாடு அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 

2. திருமணமும் அதன் பலன்களும்

2.1 திருமணம் என்பது பெரும்பான்மை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வயது வந்த இருவருக்கு இடையேயான சமூக ஒன்றிணைவு ஆகும். திருமண சம உரிமை மனுக்களிலும் இது குறித்து மனுதாரர்களால் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

2.2 திருமணத்தின் மூலம் கிடைக்கும் சமூக பாதுகாப்பைத் தமிழ்நாடு அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஏழைப் பெற்றோரின் பெண் பிள்ளைகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள், விதவைகளின் மகள்கள், சாதி மறுப்பு/கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம், அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், டாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம் போன்ற திருமண உதவித் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

.2.3 திருமணம் என்பது LGBTQIA+ சமூகத்தினருக்குத் தேவையானதோ முக்கியமானதோ இல்லை, திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் அடிப்படை உரிமைகள் எதுவும் மறுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது இருக்கும் திருமணச் சட்ட கட்டமைப்பில் உள்ள தடைகளையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஒன்றிய அரசின் வாதம் பின்வருமாறு – “அவர்கள் இந்த நாட்டில் வாழலாம், ஆனால் தற்போதைய சட்டக் கட்டமைப்பின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை காணப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக அமையாது.” சட்டத்தையும், LGBTQIA+ சமூக மக்களின் தேவைகளையும் ஒன்றிய அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. தங்கள் இருப்பின் காரணமாக தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் குடும்பங்களை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர். தங்களுக்கான இடத்தை இந்தச் சமூகத்தில் அடைய LGBTQIA+ மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தங்களுக்கான குடும்பங்களை சுயமாகத் தாங்களே தேர்ந்தெடுத்து (Chosen Family) தங்களுக்கான சமூகத்தையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது திருமண உறவு அளிக்கும் உரிமைகளை வழங்குவது இல்லை. டி. வேலுச்சாமி vs டி. பச்சையம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ஜோடிகளின் உறவின் தன்மை “திருமணத்தை ஒத்து இருந்தால்” மட்டுமே பெண்கள் குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டம், 2005-இன் கீழ் 

2.4 திருமணத்தின் அடிப்படையில் கிடைக்கும் பல்வேறு பலன்களுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் தற்போதைய திருமணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முயல்வது, எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை  ஏற்கெனவே இந்தியச் சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ மக்களுக்கு வேண்டுமென்றே கிடைக்கவிடாமல் செய்வதற்குச் சமமானது.

2.5 சமூக அமைப்பு என்ற முறையில் திருமணமானது பல்வேறு பலன்கள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியச் சட்டக் கட்டமைப்பு மற்றும் இந்தியக் கலாச்சாரச் சூழலில் திருமணத்தின் மூலம் கிடைக்கும் அந்தஸ்தானது திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் வேறு எந்த உறவின் மூலமும் கிடைக்காது. திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறித்த சிறிய பட்டியல் பின்வருமாறு (இவை மட்டுமே அல்ல):

திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு

  • திருமண பந்தத்தில் உள்ள இருவர் அல்லது இருவரில் ஒருவர் மட்டுமே தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள முடியும், வேறு யாரும் இதைச் செய்ய முடியாது. LGBTQIA+ மக்களின் உறவானது அவர்களது பெற்றோரால் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருவதால் இந்த அம்சம் அவர்களுக்கு மிக முக்கியமானது மற்றும் மிகுந்த பலனளிக்கக்கூடியது ஆகும்.
  • இந்தியாவில் தற்போது திருமண ஆகாத ஜோடிகளை விடத் திருமணமானவர்களுக்கு எளிதில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படும் LGBTQIA+ சமூக மக்கள், தங்களின் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்களை வீட்டில் இருந்து உடனடியாக எடுத்துச் செல்ல முடியாது என்பதாலும், வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலும் தங்குவதற்கான இடத்தைக் கண்டறிந்து பெற திருமண உரிமை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடுகளில் இணையரைப் பலனாளியாகச் சேர்த்தல் போன்ற பலன்கள் LGBTQIA+ சமூகத்தினருக்கும் கிடைக்கும்.
  • தங்கள் இணையரின் உடல் நலம் தொடர்பான முடிவுகளை எடுத்தல், அவசரக் காலங்களில் இணையரின் பிரதிநிதியாகச் செயல்படுதல் போன்ற உரிமைகள் LGBTQIA+ சமூக மக்களுக்குத் திருமணம் மூலம் கிடைக்கும். உயிர் காக்கும் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்ள உறவினர்கள் அல்லது இணையரின் கையொப்ப ஒப்புதலை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோருகின்றனர். தற்போதைய சூழலில் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த மிக முக்கியமான உரிமை கிடைப்பதில்லை. பெரும்பாலான LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களின் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்களின் சார்பாக இந்த முடிவுகளை எடுக்க அவர்களின் இணையருக்குத் திருமண உரிமை உதவிகரமாக இருக்கும்.
  • திருமணமானது ஒரு தம்பதியின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குவதுடன், இணையரின் இறப்பின்போது அவரின் உடலைப் பெறுவதற்கான உரிமை, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வாரிசுதாரர் சான்றைப் பெறுதல், உயிலைச் செயல்படுத்துதல், கருணையின் அடிப்படையில் பணி பெறுதல் போன்ற உரிமைகளையும் வழங்குகிறது. 

3. LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது உள்ள தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா?  

3.1 இந்து திருமணச் சட்டத்தில் “மணமகள்”, “மணமகன்” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்புத் திருமணச் சட்டத்தில் “நபர்கள்”, “தரப்பினர்” ஆகிய வார்த்தைகளும், அதன் பிரகடனத்தில் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் “நபர்கள்” எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மணமகன், மணமகள், கணவன், மனைவி ஆகிய வார்த்தைகளுக்குப் பதிலாக நபர்கள், இணையர்கள் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாலினம் அடிப்படையிலான வார்த்தைகளினால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.  

3.2 குடும்பத்திற்குள்ளான திருமணங்கள் குறித்த ஒன்றிய அரசின் கவலையைத் தீர்க்கும் பொருட்டு, தடைசெய்யப்பட்ட உறவுமுறைகள் குறித்த பட்டியலை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்க வேண்டும். 

3.3 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 18-ஆக மாற்ற வேண்டும். LGBTQIA+ மக்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களை அவர்களின் பெற்றோர்கள் சிறிய வயதில் கண்டறிந்தால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முடிந்தவரை விரைவாகத் திருமணம் செய்து வைக்க முடியும் என்பதால் இந்த மாற்றம்  LGBTQIA+ மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

4. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் 

4.1 தற்போதைய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் “அறிவிப்புக் காலம்” எனும் சட்டத்திற்கு முரணான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, திருமணம் செய்து கொள்பவர்கள் குறித்த விவரம் அவர்கள் மாவட்டத்தின் பதிவாளர் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் சிறைப்படுத்துதல், கட்டாய அடையாள மாற்றத்திற்கு உட்படுத்துதல், ஆணவக் கொலை போன்ற அபயாங்களை எதிர்கொள்ளும் LGBTQIA+ மக்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். “மறுப்புத் தெரிவித்தல்” என்பது முறையாக வரையறுக்கப்படாததால் இந்த 30 நாள் அறிவிப்புக் காலத்தில் யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த அறிவிப்புக் காலம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும்.   

4.2 எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகள் 5 மற்றும் 6 சட்டத்திற்கு முரணானவை என அறிவிப்பதற்குத் தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 30 நாள் அறிவிப்புக் காலம் நடைமுறையில் இருக்கும் வரை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் LGBTQIA+ சமூக மக்களுக்கு வழங்கப்படும் திருமணம் தொடர்பான உரிமைகளை அமல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

5. தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை

5.1 LGBTQIA+ மக்களுக்கான திருமண உரிமை அவர்களின் வாழ்க்கையை நிச்சயமாக மேம்படுத்தும். ஆனால் தங்களுக்கான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை LGBTQIA+ மக்களுக்கு வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட முடியும். பலமான குடும்ப மற்றும் சமூக உறவு பிணைப்பைக் கொண்ட ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த எதிர்பாலீர்ப்பு உடையவர்களைப் போல் அல்லாமல் LGBTQIA+ சமூக மக்கள் தாங்கள் பிறந்த குடும்பத்தையும் தங்களின் சொந்த ஊர்/சமூகத்தையும் விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர். 

5.2 குடும்ப அட்டை வழங்குதல், ஒரே முகவரியில் அனைவருக்கும் அடையாள ஆவணம் வழங்குதல் போன்றவற்றின் மூலம் சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். பிறந்த குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான உரிமை, சொத்துரிமை, சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கான உரிமை, காப்பீடு பெறுதல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். மேலும் பிற குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படுவது போன்று சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்கும் அரசு மானியங்கள் மற்றும் திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும். 

5.3 LGBTQIA+ சமூக மக்கள் ஆபத்துக் காலங்களில் உதவிக்காக நாடிச் செல்லும் சட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் பிற துறையினருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லையெனில் சட்டம் அல்லது கொள்கையில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் பலனளிக்காது. எனவே சுஷ்மா vs காவல்துறை ஆணையர் வழக்கில் 07-06-2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, காவல் துறையினர், சிறைத் துறையினர், மாவட்ட மற்றும் மாநிலச் சட்டச் சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.  இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மற்றும் அடிமட்டத்தில் பணியாற்றும் சமூகத் தலைவர்கள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான உதவியை வழங்குவோம் எனும் உறுதியை தமிழ்நாடு அரசிற்கு அளிக்கிறோம்.

நன்றி,

கட்டியக்காரி, நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் பிரதிநிதிகள் மற்றும் தனிநபர் சமூகச் செயற்பாட்டாளர்கள்

Click here for English


Translation credits: Anish Anto
Image credits: Gokul

The post திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை appeared first on ஓரினம்.

நன்றி ஹரீஷ்!

$
0
0

குடும்பப் பெயர் வைத்து எவரையும் அழைக்கும் பழக்கம் எனக்கில்லை. அது என்  விருப்பச் சார்பு*. இந்த கட்டுரை வெளி வருவதற்குள் உங்களுக்கு எண்ணற்ற வாழ்த்துக்களும், வசவுகளும் வந்திருக்கும்.

உங்கள் அம்மாவின் விளம்பரத்தை மையமாய் வைத்து நான் எழுதுவதால் தான் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து தொடங்குகிறேன்! மேலும் இது தொடர்பாய் பல வலைப்பதிவுகளும், விவாதங்களும் துளிர் விட்டுள்ளது ஆரோக்கியமானதென்றே நான் கருதுகிறேன்!

இந்த பழுத்துப்போன எழுத்து கதம்பத்தினை இன்னமும் படிக்க நினைக்கும் எல்லா வாசகர்களுக்கும் நன்றி! சுருக்கமாக நடந்தவற்றை விவரிக்கிறேன். ஹரீஷ் அவரின் அன்னை அவருக்காக வரன் தேடி நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தார். அதில் சாதி தடையில்லை,ஆயினும் ஐயர் சாதியினருக்கு சார்பு உண்டு என வரையப்பட்டிருந்தது. அதனைப் பதிவு செய்ய பல நாளிதழ்களும் மறுத்த நிலையில் மிட் டே (Mid-Day) எனும் நாளிதழ் பிரசுரித்தது. அதன் பின் பாராட்டியும் கண்டித்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

harish_matrimonial_ad

பாராட்டும் குரல்கள் 

இந்தியாவில்  முதல் முறையாக ஓர்பாலீர்ப்பு சார்ந்த வாழ்க்கைத்துணை தேடலுக்கு ஒரு குரல் கிடைத்துள்ளது.

எதிர்க்கும் குரல்கள் 

சாதி சார்பினை வெளிப்படையாய் தெரிவித்து இந்த விளம்பரம் சமூக சீர்திருத்தத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை என்னவென்றால், ஹரீஷ்-க்கு சார்பான குரல்கள் தான் அதிகம் (வெறும் 6 சதவிகித இந்தியத் திருமணங்களே சாதி கலப்புத் திருமணங்கள்). பாலீர்ப்பு சிறுபான்மையினர் அடிப்படை உரிமைக்காக தோள் நின்று போராடினாலும், அவர்கள் சாதி ஒழிப்பின் முக்கியத்துவத்தினை அறியவில்லை. சாதி, பாலீர்ப்பு அரசியலின் விளிம்பிலிருந்து ஒளியாண்டுகள் (light years) பல கடந்து இருப்பதாகவே பலரும் எண்ணுகின்றனர். எனக்கென்னவோ இவை அனைத்தும் சாதியெனும் கணத்தோடு வெட்டுண்ட (intersected) பகுதிகளாகவே தெரிகிறது.

இதனை மேலும் விவரிக்க, தருமபுரியில் நடந்த சம்பவத்தினை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இளவரசன், திவ்யா இருவரும் சாதி கலப்பு திருமணம் செய்து கொள்ள, அவர்களின் கிராமத்தில் கலவரம் தொடங்கிற்று. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொள்ளவே, குடிசை எரிப்பும், வன்முறையும் இடரின்றி தொடர்கின்றன! பின் திவ்யாவின் அன்னை தரப்பில் நீதி மன்றத்தில் மனு அளிக்கவே, ஆட்கொணர் நீதிப்பேராணை (writ of Habeus Corpus) வழங்கப்படுகிறது. திவ்யா பெற்றோருடன் செல்ல முடிவெடுக்க, இளவரசனின்  சடலம் அடுத்த நாள் மீட்கப்படுகிறது.

சாதியின் வன்மம்  மிக அதிகம்! சாதி எளிதில் மறையக்கூடிய விடயமில்லை. எல்லோருக்கும் இருக்கக்கூடிய சார்பு என்றாலும், இந்த விளம்பரத்தினை தருமபுரியோடு தரமேற்றி பார்க்காமல் என்னைப் போன்றோரல் இருக்க முடியாது!

“அதெல்லாம் சரி! சாதி எப்படிய்யா இதுக்குள்ள வந்துச்சு? என்னென்னவோ உளரிக் கொட்டுற!”, என்று நீங்கள் சொல்லலாம். பாலீர்ப்பு உரிமைகள் நிறுவப்பட்ட சமுதாயமாய் இந்தியா இருப்பதாய் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு இளவரசனும் திவ்யாவும், அமுதன் மற்றும் இளமாறனாய் இருப்பதாய் யோசித்துப் பாருங்கள்! நம் எல்லோருக்கும் அடிவயிற்றில் கொஞ்சம் நெருடல் ஏற்படுத்தும் காட்சிகள் தோன்றும்**!

சாதி சார்பு என்பது நகர தளங்களில் பழக்கம் மற்றும் வாழ்வியல் தொடர்பான சார்பாக சொல்லப்படுவதற்கு அடிப்படை இல்லாததாகவே கருதுகிறேன். குடும்ப பூசைகளிலோ, வழிபாட்டு முறைகளிலோ, விழாக்களிலோ பங்கு பெறுவதற்கான விதிகள் தன் சாதி மக்களுக்கு மட்டும் தான் இருக்கும் என்றும் மற்றவர்களுக்கு அவை விளங்காது எனவும் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? கற்றுக்கொள்வதற்கும், இசைந்து நடப்பதும் கடினமாக இருக்க இவை ஒன்றும் குவாண்டம் விசைவியல் (Quantum mechanics) அல்லவே?

நான் ஹரீஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த காரணம் இதுவே. அவரது விளம்பரம் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தினைத் தொடங்கியுள்ளது. சாதி எவ்வாறு பல தரப்பட்ட மக்களையும் பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு எண்ண வெளியினை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் வைணவ மத நம்பிக்கைச் சார்ந்த மாற்று பாலீர்ப்பு அமைப்பான கால்வா (GALVA***) போன்றவற்றின் தகவு பற்றி பலரும் விவாதித்தது நினைவிற்கு வருகிறது. முகப்புத்தகத்தில் நடக்கும் எந்த விவாதமும் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தாது என்றாலும் அவை ஒரு சிறு தீப்பொறியினை துவக்குகின்றன.

இது போன்ற வாய்ப்புகளைப் மாற்று-பாலீர்ப்பு சமூகத்தினர் பயன்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம் என்று நான் எண்ணுகிறேன். ஏனெனில் சட்ட ரீதியான தடைகளை நாம் எதிர்கொண்டு வெல்ல முடியும்! சாதி ரீதியான கட்டுப்பாடுகள் சட்டத்தைக்  காட்டிலும் வலுவானவை!

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ்  மக்களின் (individuals who do not subscribe to hetero-patriarchy / Queer) அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!

 “திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமோ என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையேதான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள். பெண்களே வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள், நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவர் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்படவேண்டும்.”

-பெரியார்


* சாதி ஆதிக்க மனித உருவில் இது நகநுனியாய் இருந்தாலும், அகற்றப்படவேண்டிய அழுக்காகவே அதனை நான் கருதுகிறேன்! குடும்ப/சாதி பெயர் பயன்படுத்தாவிட்டால் அவர்கள் சாதியற்றவர் ஆவதில்லை. ஆயின் அவரின் சாதி அடையாளத்தினை தெரு விளக்காய் பளீரிட விரும்பா/முடியா நிலைக்கு அது ஒருவரைத் தள்ளுகிறது!

** இவை நடக்கவில்லை என்று நினைக்காதீர்கள்!  பல நங்கைக் காதலர்கள் இந்தியா முழுவதிலும் தற்கொலை செய்து கொள்கின்றனர்! அதற்க்கு பாலீர்ப்பு  மட்டும் காரணமில்லை! சாதியும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

***அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு ஓர்பாலீர்ப்பு (இரு ஆண்கள்) திருமணத்தைப் பற்றிய கட்டுரையில் ஒருவரின் சாதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு காரணமாய் பிராமண சாதியின் செயல்பாடுகள் மற்ற சாதியினருக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளதாக அந்த அமைப்பின் மும்பை முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது! உயர் சாதிச் சலுகைப்  பற்றிய ஆழ்ந்த எண்ண  ஓட்டம் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

 

Viewing all 49 articles
Browse latest View live